9 Apr 2017

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்......?

இம்மக்களின் ஆசைக்கான காரணப் பொருளான ( object petit a )
ஜெ .யின் கருத்தியல்  மாயையின் பங்கு என்னவாக இருக்கும்.
மாயாவாதத்திலிருந்து விடுபடுமா அல்லது......?
( இக்கட்டுரை தேர்தல் வெற்றி யாருக்கு என்பதை நோக்கமாகக் கொண்டதல்ல) .

மரியாதைக்குரிய ஸ்ரீ நரேந்திர மோடி , இந்தியப் பிரதமரின் National e- governance plan படி ( மக்கள் அனைவரையும் டிஜிட்டல் அதிகாரம் பெற்றவர்களாக மாற்றுவது ) செயல்பாட்டிற்கு நிர்வாகத்துறை முடுக்கி விடப்பட்டிருக்கிறது .
ஆனால் , ஸ்ரீ நரேந்திர மோடியின் ப்ரிய மக்களோ , “ கிரிமினல் குற்றவாளி “ என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட கிரிமினலை ;
அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி
அதிமுக அம்மா கட்சி
அதிமுக ஜெயா  தீபா பேரவை
என்று  இப்படி கிரிமினல் பெயரில் குழுக்கள் தோன்றுவானேன் ?
எல்லாம் மக்களின் பேராதரவை ( ஓட்டு ) பெறத்தான் என்பது புரிகிறது.
இதில் அண்ணா , எம்ஜிஆர் இடம் பெறுவானேன் ?
நாங்கள் புதியவர்கள் அல்ல ; பூர்வீகர்கள் ; அதாவது அண்ணாவின் வழித் தோன்றல்கள் . ஆகவே , எம்ஜிஆர் , ஜெ. உட்பட எங்கள் தலைவர்கள்.
ஆக , இன்றைய அதிமுக என்பது ஜெ. காலத்தில் இருந்தது அல்ல ; மாறாக , இது அண்ணா , எம்ஜிஆர் , ஜெ.வின் வழித் தோன்றல்களின் அதிமுக.
சட்டப்படி அதிமுக என்ற சொல்லை , இரட்டை இலையை யாரும் பயன்படுத்தக் கூடாது . இது சட்டம்.
எல்லாம் மக்களின் மாயத்தைப் பொருத்தது . மக்களோ , மன அலசல் படி REAL –ஆக இருக்கிறார்கள் .
ஜெ.வைப் பொருத்து , அவர்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு ; இதுதான் அது என்று சொல்ல முடியாத அளவிற்கு ; கற்பனைக்கு அப்பாற்பட்டதாக ; மெய்யற்றதாக ; ஆனால் , மக்களால் உள்ளார்ந்து உணரமட்டும் முடிந்ததாக இருக்கிறது .
ஒருவாறாக, தத்துவார்த்தமாக சொல்ல வேண்டுமானால் MYSTICISM  மாதிரி உள்ளது . இதனால்தான் லக்கானின் வகைமாதியான REAL எனப்பட்டது.
இதற்கு வழமையான அர்த்தம் கிடையாது ; அது வார்த்தைகளுக்கு ( மொழிக்கு ) அப்பாற்பட்டது ; அதனளவில் அதனை உணர முடியும் ; அவ்வளவே.
மக்களின் இந்த மாயா ஜாலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதற்குப் பதிலாக ,
பால்குடம் எடுத்து , தீச்சட்டி , காவடி, கரகாட்டத்துடன் சாமி கும்பிட்டு, ஜெ.வைக் காப்பாற்ற மண்சோறெல்லாம் உண்டனர்.
இப்போது ஜெ. மறைந்துவிட்டார். மக்களின் REAL –ன் நிலைப்பாடு தொடருமா ? தொடருமானால் எந்த வழியில் ?
ஜெ.வின் மகா வாக்கியமான ,
“  நான் அனாதை , எனக்கு நீங்கள்தான் உறவு ; உங்களுக்கு நான் “
அந்த மாய உறவிலிருந்து மக்கள் விடுபட்டுவிட்டார்களா என்ன?
இந்த விளையாட்டில் டிஜிட்டல் ஸ்ரீ மோடியின் ஆட்டம் வெளிப்படையாக இல்லை ; மாய விளையாட்டாகத்தான் உள்ளது .
மக்களை REAL நிலைப்பாட்டிலிருந்து எப்படி விடுவிப்பார் மோடி ? அல்லது , அது ஒருபுறம் எதற்கும் இருக்கட்டும் ; புறவயமான டிஜிட்டலுக்கு மக்கள் மாறினால் போதும் என்பாரா ?
மீண்டும் மாயாவாத சொற்றொடரையும் அதன் அரூப விளையாட்டையும் பார்க்கலாம்.

“  நான் ஒரு அனாதை ; எனக்கு உறவினர் யாரும் கிடையாது “
இது ஒரு கருத்தியல்  (Ideology ) . இக்கருத்தியலில் தனிச் சிறப்பானது எது ?
 ( மேற்கூறிய வார்த்தை குறிப்பீடல்ல ; குறிப்பான் . பல பொருள்கள் அதனுள் மறைந்திருக்கிறது ).
எனெக்கென்று யாரும் கிடையாது ( உறவினர் ) ; நீங்கள்தான் என் உறவினர் ; நீங்கள் எனக்கும் ; நான் உங்களுக்கும் உறவு என்று மக்களின் அகவய நிலைப்பாட்டுடன் ஜெ. தன் கருத்தியலை தொடர்புபடுத்துகிறார் எனலாம்.
இன்றைய அரை நிலப்பிரபுத்துவ ( சாதியம் ) கலாச்சாரத்தின்படி கள்ளச் சாராயம் காய்ச்சுபவர் அவர்தம் சாதியுடன் நெருக்கமாக இருந்தால் , அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டால் , அதை எதிர்த்து ஊரே ( சாதி ) திரளும் என்பது எதார்த்தம்.
கிராமத்தில் பெரிய சாதிக்காரர் கிராமத்துத் தண்ணீரை நகர்புறத்திற்காக  தண்ணீர் லாரிகளுக்கு விற்றால் யாரும் கேட்கத் துணியமாட்டார்கள். உள்ளூர் தண்ணீர் நிலத்தில் கொட்டப்பட்டால் அது மீண்டும் கிணற்று நீராக , ஊற்று நீராக வாய்ப்புள்ளது. ஆனால் , கிராமத்துடன் சம்பந்தப்படாமல், முற்றிலும் கிராமத்தை விட்டு , தண்ணீர் பண்டப்பொருளாக வெளியேறினால் காலக்கிரமத்தில் ஊற்று வற்றிவிடும் . ஆழ்குழாய் தண்ணீரும் விதி விலக்கின்றி நீர் வற்றிவிடும். இது அந்தச் சாதியினருக்கும் தெரியும். தெரிந்தாலும் தண்ணீர் விற்பதை எதிர்க்க மாட்டார்கள் ; தட்டிக் கேட்கமாட்டார்கள்.
தண்ணீர் விற்கப்பட்டாலும் சாதி , மாமன் , மச்சான் உறவு வேறு ; உறவு கெட்டுவிடும்; சாதிக் கட்டுமானம் உடைந்துவிடும்  ( என்பது அவர்களின் உளவியல் ). ஆகையால் உறவு என்றால் உறவுதான் . நீ எது செய்தாலும் உறவுதான் . நீ ஜெயிலுக்குப் போனால் நாங்கள் பால் குடம் எடுத்து , ரோட்டில் உட்கார்ந்து மண்சோறு சாப்பிட்டு உன் விடுதலைக்காக போராட்டம் நடத்துவோம்.
மக்களின் இந்தத் தாராளவாத எண்ணப்போக்கே ;  “ எனக்கு நீங்கள் , உங்களுக்கு நான் என்ற கருத்தியல் , மக்களிடையே பற்றுறுதியைக் கட்டுகிறது . இந்த உறவு , பற்றுறுதிதான் 100-க்கணக்கான கோடிகளின் மோசடியை கேள்வி கேட்காமல் ; தண்டனை வழங்கியதை குற்றம் என்று ஆர்ப்பாட்டம் செய்தது .
ஏன் ஜெ.வுக்கு நூற்றுக்கணக்கான கோடிகள் தேவைப்பட்டது ? யாருக்காக ? என்ற கேள்வி மக்களுக்கு எழவேண்டும் . ஆனால் எழவில்லை.
கேள்விகள் எழாது ; எழுந்தாலும் அது மலட்டுத் தனத்திற்கே இட்டுச் செல்லும். எதிர்க் கட்சிகள் சொல்லுகிற மாதிரி பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார் ஜெ. என்பது ஓரளவு உண்மையாக இருக்கக்கூடும் .
ஆனால் , ஜெ. , இரட்டை இலை , எம்ஜிஆர் போன்றவைகள் மாயாவாதம் ; கருத்தியல் ( Ideology ) . இந்த மாயையால் கட்டுண்டவர்கள் இதிலிருந்து விடுபடுவது சிரமம் ; ‘ டாஸ்மார்க் ‘ சரக்கை விட இது காத்திரமானது .
கருத்தியல் மாயை பற்றி SLAVOJ  ZIZEK  ( சிசாக் ) கூறுவது கவனிக்கத்தக்கது .
“ கருத்தியல் ( ideology ) என்பது கருவியாகச் செயல்படுகிற ஒரு கருவியாகும் ( instrumental reason  ) ; கருத்தியல் ஒரு மனப்பாங்காகும் ( attitude ) ; சமூக மேலாண்மையில் (social domination ) அது ஒரு செயல்பாடு மட்டுமல்ல ; கருத்தியலானது மேலாண்மை உறவுக்கான அடித்தளமாகவே ( very foundation ) உள்ளது “ ( சிசாக் ) .
இந்த மாயக்கட்டில் உள்ளவர்களுக்கு ‘ கிரிமினல் ‘ என்பது பிரச்சினையாக இருக்காது . அந்த மாய உறவு பல்வேறு கனவுகளுக்கு , வண்ணக் கனவுகளுக்கு ஆதாரமாய் இருப்பதால் பகுத்தறிவோ / சுய கவுரவமோ ( ego ) வேலை செய்யாது .
இப்படி மாயாவாதத்தால் கட்டுண்டதால் ஜெ. மக்களின் petit a –வாக மாறிவிடுகிறார். அதாவது, மக்களின் ஆசைக்கான காரணப் பொருளாக , அவர்களின் மனத்தில் , நனவிலியில் நங்கூரமாகிவிடுகிறார் .
அதாவது , இந்த உறவைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமானால், குழந்தைக்கு தாயின் மார்பு மீது எவ்வளவு தூரம் பிணைப்பு ( attachment ) இருக்குமோ அந்த அளவிற்கு இருக்கும் .
தாயின் மார்பானது குழந்தையின் உடைமை உரிமையிலிருந்து விடுபட்ட கண்ணியை பிரதிநிதித்துவம் செய்கிறது.
இக்குழந்தையின் இந்த ஆசைப்படு பொருளானது இதரர் / பிறரைச் ( other ) சார்ந்தது . இது குழந்தையின்  கற்பனையான பகுதி ஆசைப்படு பொருளாகும் ( imaginary part object ).. அதாவது , குழந்தை , உடலிலிருந்து மார்பு பிரிந்த ஒன்றாக கற்பனை பண்ணிக்கொள்கிறது என்கிறார் கெலின் ( Klenian ).
மக்கள் இந்த ஆசைக்கான பொருளிடமிருந்து அவர்களுடைய கற்பனைக்கு தோன்றியபடியெல்லாம் உறவும் , ஆதாயம் பெறும் ஆசையும் அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளது.
லக்கான் , petit a  -ன் ( ஆசைப்படு பொருளின் ) இயக்கத்தைப் பற்றிக் கூறும்போது , அது காமப் படங்களைப் பார்த்து பாலின்பம் பெறுவதற்கான தூண்டல் ( Scopophilic drive ) என்கிறார். மக்கள் ஆசையின் இயக்கத்தின் கைதியாகிவிடுகின்றனர். அந்தளவிற்கு காத்திரமானது petit a -ன் தாக்கம். இதை ஜெ. ஜெயிலுக்குப் போனபோது மக்களின் செயல்பாடு வீதிக்கு வந்த முறை தெட்டத்தெளிவாக விளக்கிவிடுகிறது.
இதிலிருந்து ஒன்றுக்கு வரலாம். இந்த மாயாவாதத்திலிருந்து விடுபடாதவரை எதார்த்தத்தை பார்ப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஆற்றல் பிறக்காது.

இப்போது ஜெ. இல்லை . இந்த ஆசைப்படு பொருளானது அவரின் கட்சியான , கட்சிக் குழுக்களின் ஏதோ ஒன்றிற்கு சாதகமாகுமா அல்லது ஜெ.யை இழந்து விட்டதால் ஆசைப்படு பொருளிலிருந்து விடுதலை பெற்றுவிட்டனரா என்று ஆர்கே நகர் தேர்தல் முடிவு நமக்கு புலப்படுத்தக் கூடும்.
இது லெக்கானிய மன அலசல் ஆய்வு முறையாகும். ஓட்டளிப்பில் யார் ஜெயிப்பது , தோற்பது என்பதிலெல்லாம் அது அக்கறை கொள்ளாது.
மக்களின் ஆசைக்கான காரணப்பொருளாக ( object petit a ) ஜெ. இருப்பதா ,இருக்கக் கூடாதா என்பது தனிமனிதனின் விருப்பம்.
ஆனால் , ஜெ. என்கிற ஆசைக்கான காரணப் பொருளில் கோடிக்கணக்கான சொத்து மதிப்பு உண்டு ; அத்தோடு அதிகாரம் வேற. பின் எப்படி மக்களும் ஜெ.யும் உறவினர்களாக முடியும்.
மக்கள் அளித்த அதிகாரத் தளம் ( Phallus ) ( முதன் மந்திரி ) துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணரவேண்டும்.
ஜெ.யின் உறவில் மட்டுமல்ல ; எந்த உறவிலும் முரணியக்கம் உண்டு ; இயற்கைக்கும் கூட ( சுனாமி ) .முரணியக்கத்தை புரியும்போதே எதார்த்தம் புலப்படும்.
க.செ
உதவியவர்கள் : Slavoj Zizek



No comments:

Post a Comment