27 Jun 2019

மகா வாக்கியம் (ஏதோ சூது உள்ளதுதானே )

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்ன செய்கிறோம் என்று அறியாமலே மோடிக்கு வாக்கை அள்ளித் தெளித்துவிட்டனர் மக்கள்.
       சுயமோகப் பரவசத்தில் பிரதமர் மோடி வடக்கிலிருந்து தெற்காக அவருக்கு முக்கியமாகப்பட்ட கோவில் அனைத்திலும் நேரடியாக வந்து அர்சனை பண்ணி கடவுள்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
       மந்திரி சபை கூட்டங்களை கட்டியும், கட்டாமலும் இருக்கயிலே அவர் சூட்சுமமாக ஒரு திட்டத்திற்கான முன்னிலையாக ஒரு கருத்தை (கருத்தியலை) வைத்தார்.
       அது “ஒரே தேசம் , ஒரே தேர்தல் “ என்று ஜூன் 19ம் தேதி ஒரு அப்பிரானியாக ஒரு கருத்தை வெளியிட்டார்.  மக்களவை , மாநிலங்களின் சட்டப் பேரவைகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை வழங்க அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு மோடி அழைப்பு விடுத்தார்.

       கூட்டம் நடந்தது உருப்படியாக எந்த முடிவும் வெளியிடப்படவில்லை.
       நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்லவில்லை.  மாறாக முதலில் ஒரே தேசம் ; என்ற கருத்தை முதலில் வைக்கிறார்.
       “ இந்தியா “ என்பது இப்போது ஒரே தேசமாகத்தானே இருக்கிறது.  அப்படி இருப்பதை ஏன் இப்படிச் சொல்ல வேண்டும் !
       இதில் ஏதோ சூது உள்ளதுதானே .  ஒரே தேசம் என்ற முழக்கம் நேரடி அர்த்தத்தை தாண்டி வேறு சில கருத்துக்களும் அதில் உறைந்துள்ளது என்பதை உணர முடிகிறது.
       ஒரே தேசம் என்பது மகா வாக்கியம் என்று உணர்ந்தால், உள் உறைந்துள்ளது புரியவரும்.  அதாவது அது ஒரு கருத்தியிலாக (IDEOLOGY) யாக முன் மொழியப்படுகிறது.
       கருத்தியல் பற்றி சிசாக்கின் கருத்து “ கருத்தியல் (IDEOLOGY) என்பது கருவியாகச் செயல்படுகிற ஒரு அறிவாகும் ; கருத்தியல் ஒரு மனப்பாங்காகும் (attitude ) சமூக மேலாண்மையில் அது ஒரு செயல்பாடு மட்டுமல்ல ; கருத்தியலானது மேலாண்மை உறவுக்கான அடித்தளமாகவே உள்ளது ;
       இந்த கருத்தியலின் உள்ளடக்கமானது தனிச்சிறப்பான அர்த்த விளக்க முறைகள் மூலமாக அகவய நிலைப்பாட்டுடன் தொடர்புபடுத்தும் பொழுது, இது நம் அக்கரைக்குரிய விசயமாகிறது.
       இது இன்று பூடகமாக ஒரே தேசம் என்பது நாளை எப்படி நீட்டிக்க முடியும் ?  மக்களின் மேல் இதை கட்டமைக்க மோடி இலவசம் தவிர்த்து இந்த கருத்தியலின் பல வண்ணங்களே மக்களை மயக்கிவிடும் ஆபத்துள்ளது.  நீட்டிக்க அதில் இடமுள்ளதா ?  என்றால் ஆம் என்பதே பதில் .
       எப்படி என்றால் ஒரே தேசம் என்பது அடுத்து ஒரே மொழி என்றாகலாம் , அடுத்து ஒரே மதம் என்றாகலாம் .   அடுத்து மொழிவாரி மாகானங்கள் இனியாகும் காலத்தில் மாகான அந்தஸ்த்தை இழந்து ஒரே நாடு என்ற பதாகையின் கீழ் உள்ள மாநகராட்சி அந்தஸ்திற்கு மாற்றம் பெறலாம் .  இவைகள் உடனடியாக அஜன்டாவாக வரும் என்று சொல்லவில்லை .  அதிகாரம் , சுரண்டள் , சமூக மேலாண்மையில் ஆதிக்கம் செய்யும் போது ஒவ்வொன்றாக நடைபெற சாத்யமுள்ளது தானே !
       இந்த கருத்தியலை நியாயப்படுத்துகின்ற தர்க்கம் தான் முதல் அரசியல் பணியாகும் .
       மோடியின் கருத்தியலை அரசியலின் அடிப்படை உரிமைக்கெதிரா இருக்கிறதா இல்லையா என்ற சட்ட ரீதியில் சிந்தித்தாள் கருத்தியலானது கருவியாக செயல்படுவது என்றாகிவிடும் .
       கருத்தியலை எதிர்த்து விழிப்பாக மக்களை இருக்குமாறு செய்வதே மகா வாக்கியத்திற்கு எதிரான அரசியலாகும் .
                                                                     க . செ

9 Jun 2019

நீட் தேர்வு – தற்கொலைகளுக்கான கொள்கலனா?


      நீட் தேர்வு இந்தாண்டும் தற்கொலைகளுக்கு காரணமாகியிருக்கிறது.
       இந்த தற்கொலைகள் நீட் தேர்வின் விளைவு என்பதால் அரசியலாயிற்று.
கட்சிகளின் துயர விசாரிப்பு நடந்தேறுகிறது.
       நீட் தேர்வு மட்டுமே இத்தற்கொலைக்கு காரணம் என்று சொல்ல முடியுமா என்ன?
       நீ உச்சானி கொம்பைப்  பிடிக்க வேண்டுமானால் நீட் தேர்வு உன் லட்சியமாக வேண்டும்           என்று பதின்மவயது மாணவ, மாணவியருக்கு உசுப்பேத்துவது யார்?  சமூக அமைப்புதானே!
       பெற்றோர், கலாச்சாரம், ஊடகங்கள், விளம்பரங்கள், இத்தியாதிகள்தானே !
நீட் தேர்வு நடைபெறுவதும், தற்கொலையும் ,உடனடியாக அரசியல் கட்சிகளால்                   கண்டனங்களும்  நடந்தேறுகின்றன.
       ஊடகங்கள்  நீட் தேர்வு பற்றி வாத, பிரதிவாதங்களை அந்த வாரம் முழுவதும் நடத்துவதோடு சரி.
       கல்வியை வேலை / சமூக அந்தஸ்தாக மட்டும் முன்னிறுத்தப்படுவதால் இந்த துயரங்கள் வழமையாகிவிட்டன.
       இம்மாதிரியான தற்கொலைக்கு காரணமாக தேர்வுகளை மட்டும் சுட்டிக்காட்டுவது சமூகப் பொறுப்பைத்  தட்டிக்கழிப்பதாகுமே.
       நீட் போன்ற தேர்வுகளை பெற்றோரின் கனவாக / தம்பிள்ளைகளின் எதிர்காலமாக பாவிப்பது என்பது மாணவர்களை கொம்பு சீவிவிடுவதற்கு ஒப்பாகும்.
       இம்மாதிரியான தோல்வியால் துவண்ட மாணவர்களின் தற்கொலை பற்றி, தமிழக ஆனமீகவாதியின் ஒரு கூற்றை அறியலாம்.
       ” ஒருவர் ஒரு தோய்ந்த ஆண்மீக வாதியிடம் இப்படி ஒரு கேள்வியை முன்னிறுத்துகிறார்.
கேள்வி :  சிலர் ஏன் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர்?
பதில்:    உடலோடிருப்பது சகிக்க முடியாத துன்பமாய்த் தோன்றுங்கால், அதை ஒழிக்க விருப்பம் உண்டாகிறது,  ஆனால் துன்பத்தை தருவது மனமே.  விவேகிகள் அதனையே ஒழிக்க முயல்வர்”  -ரமணர்.
  உடல் ஒழிப்பு விருப்பம் தவறு / தேவையற்றது என்கிறார் தானே?  துன்பத்தை தரும் மனமே ஒழிக்கப்பட வேண்டியது என்கிறார்.
       இந்த மனமே /  எண்ணமே நிலவும் மேலாண்மை அதிகாரத்துவத்தால், பெற்றோரால், கல்விக் கூடங்களால் சொல்லாடல்களாக /  விழுமியங்களாகி சுயமோகத்தை இந்த புள்ளியில் நிப்பாட்டியிருக்கின்றனர், அது துன்புட்டிருக்கிறது.  இதைத்தான் எதிர்க்க வேண்டும் / இந்த மனத்தைத்தான் ஒழிக்க வேண்டும். அதுவே விவேகிகள் வழி என்கிறது ஆன்மீகம்.
       மன அலசல் உளவியலோ,  ” தேர்வில் தோல்வி என்றவுடன் தன்னைத்தானே அதிபுத்திசாலி என்ற எண்ணம், கவர்ச்சி நொடித்துப் போகிறது.  தன்னின் மறைவான உண்மையான சுயம் ( hidden true self  ) வெளிப்பட்டுவிட்டது என உணரும் போது மனக்காயம் உருவாகிறது” என்கிறது.
       ” மேலும், அவர்களின் முக்கியத்துவம் இப்போது கேள்விக்குள்ளாகிறது.  சட்டென்று அது மனக்காயமாகி, மன உளைச்சலுக்கான காரணமாகிறது.  மேலும் தோல்வியைச் சந்தித்ததில் உருவான அவமானமாக கருதுவதின் விளைவு அது.  இப்போது சுயமோகியின் சுயகௌரவம் / சுயமதிப்புக்கான அச்சுறுத்தலால் விளைந்த கட்டுக்கடங்காத மனவலி, தன் மீதான கோபம். இவைகள் சுய அழிப்புக்கு வித்தாகிறது எனலாம்” (கோஹட்)
       தற்கொலைகள் நீட் தேர்வில் மட்டுமே நடப்பதில்லை அல்லவா?
       ஆகவே, முதலில் பெற்றோர்கள் தங்களைத் தாங்களே தாம் யார் என்று அறிந்துகொண்டு, தம் பிள்ளைகளின் மன வளர்ச்சியை முதன்மைப்படுத்தி வளர்ப்பதை மறந்து, புற வளர்ச்சி, புற மகிழ்ச்சி விழுமியங்களை பிள்ளைகளின் அடையாளமாக மற்றுவதை நிறுத்த வேண்டும்.  அவர்களின் லட்சிய அகன் மீது கவனம் செலுத்த வேண்டும்.
       பாராளுமன்ற அரசியலில் பொழுது போக்குவதைவிட, பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தலாம்.
       தற்கொலை தனிமனிதப் பிரச்சினை அல்ல, மாறாக, சமூக அரசியல் பிரச்சினையாகும்.
       ஊடகங்கள் பதின்மவயதினரின் மனத்தை கிரிக்கெட்டாக எண்ணி விளையாடிக் கொண்டிருக்கின்றன.  அரசியல் வாதிகள் இனியாகும் வாக்குச் சீட்டுகளாக இவர்களை கணக்கிடுகிறார்கள்.  காப்பாற்றும் விழிப்பு / சுய விழிப்பு மட்டுமே தேவை.

1
                                                                            க.செ


.