Showing posts with label இந்து. Show all posts
Showing posts with label இந்து. Show all posts

22 Aug 2019

ஜாதி அடையாளமான கயிறு

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் அத்திவரதரின் செல்வாக்கு, கவர்ச்சி, மூலை முடுக்கு எல்லாம் ஈர்த்தது ;
       இது நடந்து கொண்டிருக்கும் பொழுதே தமிழகத்தின் சில பள்ளிகளில் மாணவர்கள் தங்களின் ஜாதி அடையாளங்களை காட்ட மணிக்கட்டில், அந்தந்த ஜாதிகளின் அங்கீகாரம் பெற்ற கலர் கயிறுகளை கட்டி வருகை புரிந்துள்ளனர்.  இத்தோடு ஜாதிக் குழுக்களாகவும் காட்சி அளித்துள்ளனர்.
       நெற்றியில் நாமம், தின்னூறு, குங்குமம் போன்ற குறியீடுகள் மத அடையாளமாக இருப்பது வழக்கமாக உள்ளது ;  டீன் ஏஜ் மாணவர்கள் ஜாதிக்கான கலர் கயிறுகளை கட்டி நிகழ் கலையாக்கிவிட்டிருக்கின்றனர்.
       கல்வித்துறை “ ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத்தும் இதுபோன்ற வழக்கங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது ;   கண்கானித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . . .  நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் “ .

       இந்த அறிக்கை வெளிவந்த அடுத்த நாளே “ இந்து மத “ குழுக்கள் கல்வித்துறை , மீது கண்டனக்குரல் எழுப்பியது கண்டித்தது. 
       அதில் ஒரு குரல் குழு மாணவர்கள் கயிறு அணிவது , திலகமிடுவது போன்றவற்றை தடுக்கக்கூடாது , பள்ளி கல்வித்துறை தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் . “  உடனடியாக அரசாங்கம் பணிந்தது .  தினமலர் – 05.08.2019.
       இதே காலகட்டத்தில் ஈரோடு பக்கம் தலித்துகள் ஒரு கோரிக்கை வைத்து போராடிக் கொண்டிருந்தனர் .  அந்த கோரிக்கை “ தயை “ உள்ள மனங்களுக்கு வேதனை அளிப்பது .  அது தங்களுக்கான சுடுகாட்டை எது ? என்று ஒதுக்கித்தாருங்கள் என்பதுவே .
       இதற்கு எத்தனை ஆதரவுக் குரல் ஒலித்தது ?  தெரியவில்லை .  இந்த அவர்களின் நிலையை கண்டித்தது யார் .  இவர்கள் எந்த மதத்தினர் ?  என்ன கலர் ?  யார் சொல்வது ?
       மாணவர்கள் ஏன் இந்த ஜாதிக் கவர்ச்சியில் விழுந்தார்கள் என்பதையாவது ஆராயாமல் , மாணவர்களை எப்படி கண்டிப்பது ?  அவர்களுக்கு விழிப்புணவர்வு எப்படி கொடுப்பதாம் ?
       பள்ளி மாணவர்களின் அத்துமீறல் சமீபத்தில் அதிகமாயிருக்கிறது என்பதை முன்னிட்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்ச்சிக்கு ஏற்பாடு செய்து , அது நடக்கவும் ஆரம்பித்துவிட்டது .
       ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அளிக்கும் உளவியலார் ஒருவரிடமிருந்து அவரின் பயிற்சி அனுபவம் என்ன என்று கேட்கப்பட்டது .  அவர் மிகத் தயங்கி , தயங்கி சொன்னது ஆசிரியர்கள் பயிற்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை .  கற்பதில் போதுமான , அக்கரையில்லை , தங்களுக்குத் தெரியும் , எல்லாருக்கும் எல்லாம் தெரியும் மனப்போக்கு உண்டு  வெளிநாட்டு உளவியல் கல்வி எதற்கு ?  ( இன்னமும் உண்டு ) மாணவர் படிக்கமாட்டேன் என்கிறார்கள் , அடங்குவதில்லை  என்றனர் .
       வள்ளுவர் , திருமூலர் போன்றவற்றிலிருந்து ஏன் நடத்தமாட்டேன் என்கிறீர்கள் . 
       இப்பிரச்சனையை மிக எளிதாக முடித்து வைத்த பெருமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சாரும்.
       அவரின் தீர்வு இதுதான் “ மாணவர்கள் தங்கள் ஜாதி , மத அடையாளங்களை கட்டிக் கொள்ள எந்த தடையும் இல்லை “ , தினமலர் 16.08.2019 .
       மேற்கண்டதை ஆராயும் முன் மாணவர்கள் , ஜாதி , ஆசிரியர்கள் பற்றிய கருத்தமைவு மிக முக்கிய ஒருவரான “ ஈ.வெ.ரா “ வை திரும்பிப் பார்க்கலாம் .
ஆசிரியர்களுக்கு . . . ஈ.வெ.ரா
       “ நீங்கள் ( ஆசிரியர்கள் ) முதலில் மக்களுக்கு சுயமரியாதை இன்னதென்பதை கற்றுக் கொடுக்க வேண்டும் .  மானம் , ஆண்மை இன்னதென்பதை கற்றுக் கொடுக்க வேண்டும் , சமத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் , மக்களிடம் அன்பு காட்ட கற்றுக் கொடுக்க வேண்டும் ;  தேசபிமானத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் . “
       “ நமது நாட்டில் அறிவாளிகள் கல்வி விசயத்தில் செய்ய வேண்டிய வேலை முதலில் உபாத்தியாயர்களுக்குப் படிப்பளிக்க வேண்டும் .  100இல் 5 உபாத்தியாயர்களுக்குக்கூட அறிவு என்பதாக ஒரு விசயம் இருப்பதே தெரியாது “ ,  மேலும்
       இன்றைக்கு ஆசிரியர்களுக்குச்  சம்பளம் பெறுவதுதான் முக்கியமாக இருக்கிறதே ஒழிய ,  பையன்களைப் படிப்பதில் ,  நல்வழிப்படுத்துவதில் அதிக கவனம் , அக்கறை இல்லை .  இந்த நிலை மாற வேண்டும் “ ,
       ( இன்னும் நிறைய இருக்கிறது . விரும்பினால் நூலைப் படிக்கலாம் )
மாணவர்களுக்கு
       “ முதலாவதாக மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் .  ஈ.வெ.ரா-வின் கருத்தமைவை உள்ளார்ந்து நோக்கினாள் ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு சமூகப் பிரக்ஞை , சமூக பொறுப்பானது அவர்களின்  அடிக்கட்டுமானமாக இருக்க வேண்டும் என்பதாகத் தோன்றுகிறது .  
       “ மாணவத் தன்மையிலேயே இன உணர்வு பெற வேண்டியது முக்கியம் என்கிறார் .  எதற்கு ?, “ இன இழிவு நீங்க வேண்டிப் பாடுபடுவதுதான் முக்கியம் . “ , என்கிறார் .   மேலும் “ படிப்பதால் சூத்திரப் பட்டம் போய்விடுமா ?  சமூக இழிவு நீங்கிவிடுமா ?  என்றாலும் – படித்துக் கொண்டிருக்கும்  போது அதை கெடுத்துக் கொண்டு கிளர்ச்சி செய்தல் கூடாது ;  “ , என்கிறார் .  மேலும் அவர் “ படிக்கும் பிள்ளைகள் கல்லூரியின் சட்ட திட்டங்களுக்கு அடங்கித்தான் இருக்க வேண்டுமே தவிர , சண்டை விளைவிப்பதோ, கலகம் செய்வதோ கூடாது “ ,
       மாணவர்கள் “ சினிமாவுக்கும் , கோவிலுக்கும் போகக்கூடாது “ போகிறவர்களிடமும் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கூறி  தடுத்து நிறுத்த வேண்டும் .  “ பெரியார் கணினி “         – புலவர் நன்னன் .
       மாணவர்களுக்கு ஜாதி அடையாளக் கயிறு கட்ட வேண்டியது எப்படி நடைபெறுகிறது ?  என்று நாம் கேட்டால் சாதி ஒரு அமைப்பு ( system   ) / ஒழுங்கு முறை என்று புரிந்து கொண்டால் , மாணவர்களின் சித்த தளமும் , அது கருத்தியலோடு கொண்டுள்ள உறவும் , ஜாதியம் மாணவர்களை கொஞ்சம் , கொஞ்சமாகப் பதப்படுத்துகிறது “ , வீடு , பள்ளி , போன்ற கலாச்சாரத் தளத்தில் அரசியலும் , கருத்தியலும் வடிவ உருக்கம் , வரலாற்று ரீதியிலும் , அரசியல் நிகழ்வினாலும் கட்டப்படுகிறது .
       அதாவது சமூக உருவாக்கத்தின் இயங்கு நுட்பமாக ( mechanism  ) மேலே கூறியவைகள் இருக்கின்றன .  இது உளவியல் பார்வை .
       சாதியத்தின் முக்கிய அலகான தீண்டாமையும் , அந்நியப்படுத்தலும் பிரக்ஞையாகிறதும் இந்த தளத்தில் தான் நடைபெறுகிறது .  ஆக சாதிக் கயிறால் மாணவன் கட்டப்படுகிறான் என்பதே சரியாக இருக்கும் .
இனி ஆசிரியர்கள்.
       ஆசிரியர்களின் உறவு என்பது  சமூகத்  தொடர்புக்கான சங்கிலியின்  ஒரு  வளையம் ( Link   ) சமூகத்தோடு தொடர்புபடுத்தும் கரணை ( Link  ) அது ஆசிரியர்களுக்கு , மாணவர்கள் மீது நனவிலியாகவே ஒரு விலகள் / வெறுப்பு என்பது அகவய யதார்த்தமாக உள்ளது .
       இந்த தப்பென்னமே / முன் அனுமானமே ஆசிரியரகளிடம் ஒரு விட்டேத்தியான மனோபாவத்தை கொடுக்கிறது .  இந்தப் போக்கு மாணவர்களை இதரராக ( other  ) கருத வைக்கிறது .  இதனால் ஆசிரியர்கள் சங்கிலியின் கரணை (  Link   ) யாக இருப்பதிற்குப் பதில் விலக்கு ஏற்பட்டுவிடுகிறது .
       மாணவர்கள் “ விலக்குதலும் , மனிதாபிமானமற்ற தன்மை நிலவுகிற தீவிரமான அரசியல் முரண்பாடுகளிலும் , நாசகரமான வெறுப்பு    மனப்பான்மை நிலவுகிற தளத்தில்தான் “ , வளர்ந்து ஆளாகிறார்கள் .
       மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் அங்கீகரிப்பு இல்லை ,  ஆசிரியர்களுக்கு மாணவர்களிடம் அங்கீகரிப்பிள்ளை .  இதுவே இருவரிடமும் மன ஆரோக்கியமில்லாமல் போவதற்கு காரணமாகும் .
       அங்கீகரிப்பு என்பது இருவர்களுக்கிடையிலான பரஸ்பர உறவாக மாறும் .  இருவரும் சமமே அதே நேரத்தில் அவர்களுக்கான தனித்தன்மையும் உண்டு .
       “ பிறரால் அங்கீகரிக்கப்படும் போதே சுயம் பற்றிய பிரக்ஞை ( sense of self  ) வளர்கிறது “ .
       இறுதியாக இந்து ஆன்மீக குழுக்களுக்கு இவ்வளவு அதிகாரமா ?
       “ அத்திவரதர் தரிசனம் நீடிக்க முடியாது “ என்றும் கோவில் மரபு , வழிபாட்டு முறையில் தலையிட முடியாது .  கோவில்  அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும் “ உயர்நீதிமன்றம்.
       கோவிலும் , மதமும் அதிகார அரியணையில் இருக்கிறதா ?  இல்லையா ?

20 Feb 2015

பலிகடாக்களுக்கு... நம்பிக்கை வருமா?


ஆதாரப்பூர்வமான ஒரு விசயத்தைப்பற்றி, அதைப் பத்திரிக்கைகள் செய்தியாக்கும்போது ஒரு              விளையாட்டு, அதைவிடச் சூதானவிளையாட்டு நடைபெறுகிறது . உதாரணத்திற்கு ,
பிப்.15-2015, HINDU-வில்
                “GODHRA COURT FREES  70 
                IN POST-GODHRA RIOTS  CASE  ” - என்று தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டிருக்கிறது.
                தமிழில்,   இந்து....
            குழந்தைகள் உட்பட 14 பேர் பலியான கலவரச் சம்பவம்
(கொட்டைஎழுத்தில்)  கோத்ரா வழக்கில்70 பேரும் விடுதலை
என்று செய்தி வெளியிட்டிருக்கிறது .
                ஏன் இந்த மனப்பாங்கு மாறுகிறது ? உண்மையில், கோத்ரா வழக்கு என்பது குஜராத் கலவரத்திற்கு தீப்பொறியாய் இருந்தது .  அதாவது , 2002, பிப்ரவரி 27-ந்தேதி குஜராத் மாநிலம்., கோத்ரா ரயில் நிலையத்திற்கு வந்த சபர்மதி ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். தீ வைத்ததாகச் சொல்லப்பட்டவர்கள் முஸ்ஸீம்கள். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட ஒருவார காலம் படுகொலைகள் நடந்தன. அதில் ஒன்று பனஸ்கந்தா மாவட்டம்,சேஷன் கிராமத்தில் பெண்கள் உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கைத்தான்   கோத்ரா வழக்கு என்று தலைப்பிடுகிறது தமிழ் இந்து.

                கோத்ரா என்றவுடன் சபர்மதி ரயில் எரிப்புத்தான் இந்துக்களுக்கும், முஸ்ஸீம்களுக்கும் வரும் ; நினைவு  கூறமுடியும். ஆனால் ,  குஜாராத் கலவரம் என்றால், இந்துக்களின் முஸ்லீம்கள் மீதான கொலைவெறித் தாண்டவம் நினைவுக்கு வரும் . தமிழ் இந்து உடனடியாக பரபரப்பைத் (sensation ) தூண்ட வேண்டும் என்பதற்காக  கோத்ரா என்ற குறிப்பானைப் பயன்படுத்தியிருக்கிறது. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழ் வாசகத் தன்னிலைகளை பிண்டங்களாக்கி அரசியல் நடத்தப் போகிறதோ ?  தெரியவில்லை.
                இனி , இந்தவழக்கு பற்றி . குற்றச்சாட்டுக்களில் முதன்மையான குற்றச்சாட்டு இன்றைய பிரதமர் மோடியின்மீது எழுந்தது ; அவர் அன்று குஜராத்தின் முதலமைச்சர் . அவருடைய அரசுதான் இந்த 70 பேர் மீதும் வழக்குத் தொடர்ந்தது. தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டுள்ள 70பேர் மீதான குற்றங்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததால் 70பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
                அரசு வழக்கறிஞர் சொன்னதாக தமிழ் இந்துவின் வாக்குமூலம் ,
 வழக்கில் நேரடி சாட்சிகள் மௌனமாகிவிட்டனர். வாய்மொழி சாட்சிகள் ஒத்துழைப்பு      அளிக்கவில்லை என்கிறது.
ஆனால், ஆங்கில நாளிதழில்,    Eye Witnesses Turned Hostile    என்று உள்ளது. ஆங்கில இதழ் வாசகப்படி நேரடி சாட்சிகள் அதிகாரத்தால், RSS,  கலாச்சார இந்துப் போலிசாரால் பயமுறுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஏதோ விலை கொடுத்திருக்க வேண்டும் அவர்களுக்கு. அதனால்தான் அரசுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்ல வேண்டியவர்கள் அரசுக்கு எதிராகச் சாட்சி சொல்லிவிட்டனர். இந்த மனப்போக்கிற்குத்தான் இந்து தர்மம் என்று பெயரா?
இது பற்றி நாடு தழுவிய எந்தக் கேள்வியும் வந்ததாகத் தெரியவில்லை. குஜராத் மாநில நீதிமன்றம் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பளித்துவிட்டது. அந்தக் கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் , கோத்ரா ரயில் எரிப்பில் இறந்த 59 கரசேவகர்களின் குடும்பங்களுக்கும் , குஜராத் கலவரத்தில் இறந்தவர்களின் மனக்காயம் , மனத்துயரம் , இழப்பு  , ஏக்கம் இவைகளுக்கெல்லாம் யார் பொறுப்பு ? என்ன தீர்வு கண்டிருக்கிறது குஜராத் அரசு அல்லது நீதிமன்றம்?
பலியாடுகள் பலியெடுத்தவர்களை மன்னித்துவிட்டனரா ? மறந்துவிட்டனரா?
சீழ்பிடித்த சுயமோகம் தன்னை , தன்னைச் சார்ந்தவைகளை புனிதமானதாகவும் , பிறரை , பிறர் சார்ந்தவைகளை தீயவையாகவுமதான் (evil ) பார்க்கும்  .
 எல்லா மதத்தினருக்கும் சமஉரிமை    மோடி.
இந்தச் சொல்லாடல், சேஷன் கிராமத்தில் 14 பேர் கொல்லப்பட்டதற்கு தண்டனை யாருக்கும் கிடையாது என்பது , மகிழ்ச்சிக்குரியது அல்ல. அத்துடன் நேரடிச் சாட்சிகள் ( eye witnesses) வழக்கின் எதிரிகள் பக்கம் சேர்ந்திருக்கிறார்கள். அந்த கிராம மக்களுக்கு மட்டுமல்ல, 14 பேரின் சாவுக்கான மனக்காயம், இழப்புணர்வு, கையறுநிலை அடைந்த மனங்களுக்கு
நேரடி சாட்சிகளின் பிறழ்வு ஒரு நோய்க் குறிப்பானாகி விடுகிறது.
இனி, இந்துக்கள் மீது  நியாய உணர்வற்றவர்கள்,  நம்பிக்கைகளுக்குத் தகுதியற்றவர்கள்  என்ற உணர்வு மேலெழும்பும் தானே?. இப்போது  எல்லா மத நம்பிக்கைகளும் இங்கு சமமாகப் பாவிக்கப்படும்   என்ற கூற்று நகைக்கத்தக்கதாகவே உணரப்படும் , இல்லையா?
சமூகக் குழுக்களுக்கிடையிலான நல்லுணர்வை எப்படியும் பாதுகாக்க வேண்டும் என்ற   அக்கறை ,  நெறி , அரசுக்கு , மதவாத இந்து மக்கள் குழுக்களுக்கு வேண்டாமா?
க.செ.
©the author