30 Oct 2016

தீபாவளி , தீபாவளி

    வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல என்னை மன அலசல் அனுமதிக்கவில்லை . மாறாக , தீபாவளி என்றவுடன் என்ன ? , என்ன ? என கட்டுடைத்துப் பார் என்ற அழுத்தம் நெஞ்சை ஆக்கிரமித்தது .
                முதலில் தீபாவளி என்ற பண்டிகையை / யுகாந்திர பண்டிகையை சுருக்கமாக  அறிய ,
………………………….
“ பிரம்மாவிடம் இருந்த வேதங்களை திருடிய அசுரன் ஒருவன், பாதாள லோகத்தில் ஒளிந்து கொண்டான். அதை மீட்க , வராக அவதாரமெடுத்து , பூமிக்குள் சென்றார் பெருமாள் . அப்போது , பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் , அவளுக்கு ,  ‘ பவுமன் ‘ என்ற மகன் பிறந்தான் .                                              
பவுமன் என்றால் , பூமியின் பிள்ளை ; அவன் கெட்ட குணங்களைக் கொண்டவனாக இருந்தான் . இதனால் ,  நரகாசுரன் ‘ என்று அழைக்கப்பட்டான். ‘அசுர குணம் கொண்ட மனிதன் ‘ என்று இதற்குப் பொருள்.
நரகாசுரன் வசித்த நகரம் , தற்போது அசாம் என்று அழைக்கப்படும் காமரூபம் பகுதியில் இருந்த , ப்ராக் ஜ்யோதிஷபுரம். ஜோதிஷபுரம் என்றால் பிரகாசமான பட்டணம் என்று பொருள் .‘ ப்ராக் என்றால் கிழக்கு அல்லது முன்பக்கம் ; இந்நகரமே , தற்போது , கவுகாத்தி எனப்படுகிறது .
தேவர்கள் மற்றும் பூலோக மக்களை கொடுமை செய்தான்  நரகாசுரன் . பெரிய இடத்துப் பிள்ளை என்பதால், அவனை யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை .
வேறு வழியின்றி நரகாசுரனின் தந்தையான பெருமாளிடம் புகார் செய்தார் பிரம்மா.
நரகாசுரனோ , தன் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். இதையடுத்து , இன்னொரு பிறவியில் , சத்தியபாமாவாகப் பிறந்து , கிருஷ்ணரை திருமணம் செய்தாள் பூமாதேவி .
அவளை அழைத்துக் கொண்டு , நரகாசுரனுடன் போருக்குச் சென்ற கிருஷ்ணர் , ஒரு கட்டத்தில் , நரகாசுரனால் தாக்கப்பட்டு, மூர்ச்சையடைபவர் போல் நடித்தார் . பதறிப்போன சத்தியபாமா , தன் கணவரைக் காப்பாற்ற தன் மகன் மீது அம்பு தொடுத்தாள் ; நரகாசுரன் இறந்தான் .
அதன்பின்பே , முற்பிறவி நினைவு வர , பெற்ற பிள்ளையையே கொன்றுவிட்டோமே என்று, அவளுக்கு வருத்தம் ஏற்பட்டது. அதேநேரம் அவனது மரணத்திற்காக , உலகமே தீபமேற்றிக் கொண்டாடுவதைப் பார்த்தாள். அதனால் , பெருமாளிடம் , தன் மகன் இறந்த நாளை , தீபாவளி என்றும் , அவன் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இறந்ததால் , நரக சதுர்த்தசி என்றும் பெயரிட்டு கொண்டாட அனுமதி கேட்டாள் . அதன்படி , தீபாவளி கொண்டாடப்படுகிறது ......
-தி.செல்லப்பா . தினமலர் வாரமலர் அக்டோபர் 23 , 2016
       படித்தவுடன் திகைப்புத்தான் முதலில் வருகிறது . ஒரு தாய் தன் மகன் என்று அறியாமல்  (கணவனுக்குத் தெரிந்தும் ) ; ( மாயக் கிருஷ்ணனுக்குத் தெரியும் ) , மனைவியிடம் சொல்லாமல் , தான் போரில் காயமடைந்து விட்டதாக நடித்து , மனைவியை உசுப்பேற்றி விடுகிறான் .
       தாய்  ( சத்தியபாமா ) கோபத்தில் மகனைக் கொன்று விடுகிறாள் . கொன்றபின் , கடந்தகால நினைவு வந்து தான் கொன்றது தன் மகனை என்று அறிந்து பூமித்தாய் புலம்புகிறாள் .
       தீபாவளி என்றால் நரகாசுரன் அழிந்த நாள் . ஆகையால் தீப ஒளி நாடெங்கும் .
       முதலில் இது ஒரு வைணவக் கதை . அது அனைவருக்குமானதாக கட்டப்பட்டுவிட்டது
       நரகாசுரன் யார் ? தந்தை கிருஷ்ணன் ; தாய் பூமாதேவி .
       அதாவது , தெய்வீகத் தம்பதியருக்கு பிறந்த மகன் அசுரன் ஆகிவிட்டான். அதனால் பெற்றோரே தங்கள் மகனைக் கொன்றுவிட்டனர். இதெல்லாம் தீபாவளியில் வெளிப்படாது . பிரதானமாக , நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் என்பதைத் தீபத் திருநாளாக அனைவரும் கொண்டாட வேண்டும் என்று முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறது (  projection ) வரலாறு .
       நரகாசுரன் செய்த குற்றமென்ன ? அரக்கன் , பிரதானமாக தேவர்களை துன்புறுத்தினானாம் .
                தேவர்களின் ஆட்சி அதிகாரத்தை நிலைகுலைய செய்துவிட்டான் போலிருக்கிறது .
                விஷ்ணுவின்  சர்வாதிகார ( Totalitarian  ) அதிகாரம் இந்த அதிகார மீறலை ஏற்காது.
      நரகாசுரன் எல்லை மீறிவிட்டான். ஆகவே அவனுக்கு ஈடிபல் அதிகாரம் விதித்தது மரணம் ; தேவர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் .
      ஆனால் , தேவர்கள் அகலிகை போன்ற பெண்ணைக் கூட விட்டுவைத்ததில்லை . அசுரர்களும் தேவர்களும் உழைத்து , கடலைக் கடைந்து பெற்ற அமிர்தத்தை கபடத்தனமாக , மோகினி ஆட்டத்தால் அசுரர்கள் பெறமுடியாமல் செய்தது நெறியா ( Ethics ) ?
                இத்துடன் அசுரன் இறந்த நாளை தீபாவளி என்று கொண்டாட தம்பதிகள் நம்மைப் பணித்ததேன்?
       மகனைக் கொன்ற குற்றவுணர்வால் ( Guilty ) அசுரனின் நினைவை தீப நாளாக்கி விட்டார்களோ என்னவோ . அல்லது , வரலாற்றில் இடைச்செருகல் ஏதும் நடந்ததோ ? 
    ஒரு வைணவ கதையாடலை பிற சமயத்தினரும் கொண்டாட எப்படி ஏற்கவைக்கப்பட்டனர்? .
       தீபாவளி என்பது – அர்த்தமல்ல , குறிப்பீடு ( Signified ) அல்ல . அது “ குறிப்பான் “ (Signifier ) . ஒரு சமூகக் கட்டமைப்பின் வலைப் பின்னல் அது .
       அது பகுதியை முழுமையாய்க் காட்டும் நனவிலி . அது மாஸ்டர் குறிப்பான் ( Master signifier )  (மேட்ஸ்ப்ளாங்கோ).
                அது வைணவம் என்ற பகுதியில் பிறந்து இந்துக்களின் பல பிரிவினரையும் ஒன்றாக்கி தீப ஒளி ஏற்றுகிறது .
       பிறப்பிலேயே தீண்டாமையை உமிழும் சமூகத்தில் தீபாவளி அனைவருக்குமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது .
       வரலாற்றில் , ஆதியில் பாதிக்கப்பட்டவர்களைக் கூட முரண்பாட்டை உணரவிடாமல் தீபத் திருநாள் மயக்கிவிட்டது .
       சமூக அந்தஸ்தை பிறவியிலேயே இழந்தவர்கள் கூட இந்தத் தீபாவளியை ஏற்பதின் மூலம் சம அந்தஸ்து பெற்றுவிட்டதாக / பெற்றுவிடலாம் என்ற மாயையை உண்டாக்கியிருக்கிறது தீபாவளி
       தீபாவளி வர்க்கப் பிரிவினையையும் உடைத்திருக்கிறது ( தற்காலிகமாகத்தான் ) .
                ( ஆட்டுக்கறி , கோழிக்கறி , மாட்டுக்கறி ) இது ருசி பேதத்தால் அல்ல .
       சென்னையிலிருந்து பத்து லட்சம் பேர் சொந்த ஊருக்கு பேருந்தில் பயணம் செய்ய உளவியலாக கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது . ரயிலில் பயணப்பட்டவர்கள் கணக்கில் வரவில்லை .
       9 TO 5  வகையினரும் , அரசு ஊழிய உடம்புகளும் , மென்பொருள் ( soft ware ) ஊழியர்களும் சம்பளம் , கிம்பளத்தை பட்டுகளாக , நகைகளாக , பகட்டுடைகளாக மாற்றம் செய்துவிட்டது தீபாவளி.
       தீபாவளி , எப்படியோ எதிமறைகளை , முரண்களை மயக்கி ஏகத்துவத்தை நிலைநாட்டி விட்டிருக்கிறது .
      இப்படிப்பட்ட ஒரு கருத்தமைவை ( Ideology ) உள்ளடக்கியது தீபாவளி .
      இறுதியாக , தீபாவளி என்பது ஒரு பெண்ணிய பார்வை ( Female Gaze ) உணர்வு கொண்டது (லெக்கான்).
       ஆடை அணிகலன் , பகட்டு என ஒவ்வொருவரும் பிறரின் / மற்றவர்களின் ஆசைப்படு பொருளாக ( Object )  இருப்பதையே இக்கொண்டாட்டம் மையமாகக் கொண்டது எனலாம் .
       தீபாவளிக் கொண்டாட்டத்தின் பெரிய வெற்றி என்று எதைச் சொல்வது என்றால் முரணியக்கத்தில் ( சாதி / வர்க்கம் ) உள்ளவர்களை ஏகத்துவமாக்கிவிட்டதுதான் பெரிய வெற்றி எனலாம் . மீண்டும் பகுதியும் முழுமையும் ஒன்றல்ல என்பது மறக்கடிக்கப்பட்டுவிட்டது .

க.செ

No comments:

Post a Comment