4 Dec 2013

நாவினால் சுட்ட புண் ஆறாது

மினி பஸ், சிற்றுந்து ஆகி பலகாலமாயிற்று.  நவம்பர் 2013-ல் சிற்றுந்து ஸ்மால் பஸ் ஆயிற்று.  பின்பு சிறிய பஸ் ஆகியிருக்கிறது.  இதில் உள்ள அரசியல் என்னவோ?  இதில் இருப்பது அரசியலா?  மூடத்தனம் (fetishism!) மொழியை, குறிப்பான்களை தனிநபர்களுக்குச் சொந்தமாக்கி அதை உச்சரித்தாலே வாய் புண்ணாகிவிடும் என்று நினைக்கிறார்கள் போலும்.  இந்த அரசியலில் தள்ளாடுவது தமிழ்மொழிதான்.  கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தாலும் ஆய்வறிவுக்கு புலப்பட்டிருக்க வேண்டாமா?  ஊடகங்கள் மௌனம் காட்டுவது எதனாலோ?  விளம்பரக் காசுக்காகவா?  (விளம்பரக் காசு என்பது ஒரு வகை லஞ்சம்தானே, (கோடிகளில் வரும்பொழுது)]

போகட்டும், இந்த அரசியலில் நமக்கு நாட்டம் இல்லை.  ஆனால், வள்ளுவர் தமிழுக்குச் சொந்தம்தானே!  “மெய்ப் பொருள் காண்பதறிவு“ என்பது மாணவர்களுக்கான மனப்பாடப் பகுதிக்கு மட்டுமா?  இல்லை இந்த நவீன காலத்துக்கும் பொருந்துமா?  விசயத்துக்கு வரலாம் :

இரட்டை இலை, உதயசூரியன், சுத்தியல் அருவாள், இவைகள் தமிழ் மனதுக்கு சின்னம் (sign) என்றும் அது அதற்கென்று அடையாளமாகியுள்ள கட்சிகளைப் பிரதிநிதித்துவம் பண்ணுகிறது என்றும் எல்லோருக்கும் தெரியும் .

இப்போது,  ....... ”அரசு ஸ்மால் பஸ்களில் நான்கு இலைகள் வரையப்பட்டுள்ளன.  அதில் இரண்டு இலைகள் பெரியதாகவும், தனித்தனியான தண்டுகள் கொண்டும் பிரிந்துள்ளன.  மற்றவை இரண்டு சிறிய இலைகள்.....”

....... “அனைத்து நான்கு இலைகளிலும் நரம்புகள் இருக்காது.  அரசு ஸ்மால் பஸ்சில் வரையப்பட்டுள்ள நான்கு இலைகளும் அதிமுக-வின் இரட்டை இலையும் எந்தவிதத்திலும் ஒத்திருக்கவில்லை என அந்தப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது......”                             - தினமணி 27-11-2013.

இதை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்ளுவதற்கு முன் ஒரு தப்படி முன்னுக்குச் செல்ல வேண்டியுள்ளது. 

மேலே சிற்றுந்தில் வரையப்பட்ட சித்திரத்திற்கு கொடுத்திருக்கும் குறிப்பீடு (signified) சரியானதுதான் ;  ஒத்துக்கொள்ளக்கூடியதுதான்.  ஆனால், இது ஒரு நாணயத்தின் (coin) ஒரு பக்கம் மட்டுமே.  நாணயத்திற்கு இரண்டு பக்கம் அல்லவா?

நாணயம் என்ற உவமானம் எடுத்ததற்கான பொருள் “ மெய்ப்பொருள் காண்பதறிவு “ என்ற தேடலின் விளைவுதான்.

(signification) குறித்தல் என்பது இரண்டு வகையாக இருக்கிறது.  ஒன்று  connotation   மற்றொன்று denotation.  Denotation என்பதற்கான பொருள் குறிப்பிட்ட, வெளிப்படையான அர்த்தம்.  அதாவது, அரசு கூறிய பதில் சரிதான்.  என்பதற்கான காரணமே இதுதான்.  அது    denotation -ஐ மட்டுமே குறிப்பிடுகிறது.  அது வெளிப்படையான அர்த்தத்தை மட்டுமே குறிப்பிடுகிறது.  நாணயத்தின் அடுத்த பக்கத்தில்  connotation இருக்கிறது.  அதற்குப் பொருள் வெளிப்படையாகத் தெரியும் பொருள் அன்றி உய்த்துணரக் கிடைக்கும் பொருள் என்று தமிழ்ச் சொல்லகராதி கூறுகிறது.

இது மொழியியல் அறிவின் பொருள் கூறும் விளக்கமாகும்.  சசூரின் மொழியியலில் ரோலன் பர்த் “ Berth makes much more of the concept, and uses it to refer the way which the sign work in a culture… ” என்கிறார். ஒரு குறி கலாச்சாரத்தில் எப்படி வேலை பார்க்கும் என்கிறார்.  பஸ்ஸில் வரையப்பட்ட இலை, நான்கு இலை இருந்தாலும், இலை என்று பார்த்தவுடன், அந்தப் படத்தைப் பார்த்தவுடன், அதாவது அந்தப் படம் குறிப்பான் என்று வைத்துக் கொண்டால் மனதில் ஏற்படுவது இலை, எண்ணிக்கை பின்புதான்.  ஏற்கனவே கலாச்சார சமூக மனத்தில் (சமூக நனவிலியில்) இலை என்ற குறிக்கான அர்த்தம் என்ன இருக்கிறதோ அதைத்தான் இது உடனடியாகக் குறிப்பிடும்.

ஆக, அவரவர் ஒரு சித்திரம் வரைவதும், அதற்கு அவரவர் ஒரு விளக்கம் கொடுப்பதும் அவரவர் கருத்துரிமைதான்.  ஆனால் , வள்ளுவர் கூறிய “மெய்ப்பொருள் காண்பதறிவு “ என்றால் மொழியியல், லக்கானின் மனஅலசல் போன்றவற்றை ஆய்வுக் கருவியாக பயன்படுத்தும்போது மட்டும்தான் மொழிக்கும் மனதுக்கும், மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் உள்ள உறவுகள் புலப்படும்.

                                                                                                               க.செ

                                                                                        மற்றமை - 5வது இதழுக்காக.

No comments:

Post a Comment