15 May 2015

முகமூடி முகமாயுள்ளது


அத்வைதம்,த்வைதம், இவைகள் எல்லாம் இணைந்து ; இவர்களுடன் மோடியும், அருண்ஜேட்லியும் சேர்ந்து விசுவாச அரசியலின் கலாச்சாரமயத்தை ( culturalization of politics )  முழுமையாக்கி,அரக்கர்களை வென்று, நீதியை நிலைநாட்டிவிட்டனர்.அப்படித்தானே !.
      விசுவாச ஊடகங்களின் ( media ) ( பத்திரிக்கைகள் உட்பட) பதட்டம் ஓய்ந்து, எரிந்த கட்சி / எரியாத கட்சிக்கு விவாதமேடையில் குரலாட / கூச்சலாட வருமானத்தைப் பார்த்துக்கொண்டு வாழ்த்திக் கொண்டுள்ளனர்…….RESURRECTON (புத்துயிர்ப்பாம்)


மிச்சம்பேர் மனச்சாட்சியிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். விசுவாசிகளைத் தவிர பிறர் டி.வி.யில் தீவிரமாகவும் , காத்திரமாகவும் நீதிபதிகளைப்பற்றி புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
      மன அலசல் ஆய்வாளர் ( Slavoj Zizek ) கூறியபடி சகிப்புத்தன்மை உச்சத்திற்குச் சென்றுவிட்டது. இதை, இந்த அரசியல் கலாச்சாரமயத்தை கட்சிகளின் ,தலைவர்களின் உபயம் எனலாமா? சாதி அடையாளம், மத அடையாளம், மொழி அடையாளத்துடன் இந்த    விசுவாசி ’ ( Faith) அடையாளமும் சேர்ந்துவிட்டது.
      இது பச்சை குத்துதல்,தோளில் துண்டுபோடல்,கரைவேட்டியில் ஆரம்பித்து,மண்சோறு தின்பது,ஆயிரம் கண்ணுடையாளுக்காக அனைத்தையும் ஏற்று, ஆட்சிக் கட்டிலுக்கு கான்களுக்குப் பதில் மோடிகளும் ஜேட்லிகளும் சிவப்புக் கம்பளமும் ஆசீர்வாதமும் வழங்கியாயிற்று.
      ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை உண்மைதான்.
      இளந்தலைமுறையினருக்கு வரலாற்று உணர்வு பெருகுவதற்காக இது கொடுக்கப்படுகிறதா?
      ஜெயலலிதா மீது 1996 ஜூன் 14-ல் ( இப்போதைய ) பா.ஜா.கா-வின் பெருந்தலைவர் சுப்பிரமணியசாமி வழக்குத் தொடர்ந்தார்.
      1997-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 18 ஆயிரம் ஆவணங்கள், 88 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆனது. பிறகு 2000-2014 வரை இழுத்தடிப்பு. 2014-ல் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது.                               
      மனப்பதட்டம் , பித்து ஆரம்பித்துவிட்டது.தமிழகக் கோவில்களில் இராக்கால பூஜை வரை விடுதலை வேண்டி அர்ச்சனை. தீச்சட்டிகள், முளைப்பாரி, அப்புறம் மண்சோறு உண்ணல்; அரசு நிலைகுலைந்து ஸ்தம்பித்து ( stalemate ) நின்றது.
      அதாவது, சட்டப்படி ஜெயலலிதா முதல்வர் இல்லை;ஆனால் முதல்வர் பன்னீர் வேஷ்டி கட்டி வீதிக்கு வருவார், செயல்படவும் மாட்டார், விளையாடவும் மாட்டார். பின்னர் மேல்முறையீடு. 2015 மே 11-ல் நிர்வாகம் ஜெயலலிதா நிரபராதி என்று விடுதலை செய்தது.
எல்லோருக்கும் லட்டு .... மொட்டையடிப்பும் தொடங்கி விட்டது.
      ஒரு 19 ஆண்டுகள் ஒரு ஊழல் வழக்கை விசாரித்து  தீர்ப்பு சொல்ல எடுத்துள்ளது இந்த நிர்வாகம்.
      இதற்கிடையில் எத்தனை நீதி அதிகாரிகள் வந்து போயினர், அரசு வழக்குரைஞர்கள் எத்தனை பேர்?
       இவர்களுக்கான மொத்த செலவு எத்தனை லட்சம் அல்லது கோடிகள்? யார்வீட்டுப் பணம்?
      குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டபின் சட்ட அமைச்சர் வந்து அந்த வீட்டில் கைநனைத்துச் சென்றால் என்ன பொருள்? இ.பி.கோ.-வில் அதற்கு இடமில்லை, ஆனால் நெறி  (Ethics) வேண்டாமா?
      தத்துவர் J.K சொன்னமாதிரி பார்ப்பவர் பார்க்கப்படுகிறார் என்பதில் சட்ட அமைச்சர், வழக்கு விசாரணை நிறுவனம் (court) , ஆளும்கட்சிகளின் ஊக வணிகம் (கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகணும்) பார்க்கப்படுகிறார்கள்.
      இந்த தில்லைஅம்பலத்து கூத்தை விட வழக்கு விசாரணை நிர்வாகம், அதன் கூத்தும் அம்பலக் கூத்தனைவிட அபிநயம் அருமையாய் இருந்தது.
      இது வரலாறு. இனியாகும் மனிதர்கள் இந்த வரலாற்றை எப்படி, எதை அகவயப்படுத்துவர் ( introjection ) , எதையெல்லாம் வெளித்தள்ளுவார்கள் ( projection ) உளவியலாக?
      சகிப்புத்தன்மைக்கு ( சாதியை குணம் , மணம் குறையாமல் காப்பவர்கள் ஆயிற்றே?) அளவேயில்லையா?
      நெறிக்கு (ethics) எதிரியாய் / முரணாய் இருப்பது இந்த பாராளுமன்ற ஜனநாயகமே.
      இமயத்தின் குமுறல் சென்னை வீதி வரை கேட்டது கனவிலா தூக்கத்திலா? அநீதிக்கு ஆதரவான விசுவாசமும், அரசியல் கலாச்சாரமயமாக்கலும் அதிகார மையங்களுக்கே நலம் பயக்கும். விசுவாசத்தின் மூப்பு மக்களுக்கு ஜனநாயகத்திற்கு வழிகாட்டாமல் அதிகாரத்துவ பாராளுமன்ற ஜனநாயகத்திற்கே வழி வகுக்கும். ( மிசா நினைவிருக்கட்டும் ) .
      [ அரசர்கள், நீதிஅரசர்களின் தன்விருப்பு அதிகாரத்தை (discrete power) இனியும் கேள்விக்குட்படுத்தி பொதுஜன கருத்தை விவாதித்து முடிவெடுக்காமல் இருக்கும்வரை விபத்துகளுக்கு பஞ்சம் இருக்காது ].
( முதல் காட்சி முற்றுப்பெற்றது )
      பி.கு : இனி சொத்து ( லஞ்சம் வாங்குபவர்கள் ) குவிப்பவர்களுக்கு உட்சநீதிமன்ற வழிகாட்டல் – உச்சபட்ச எல்லை 20 % - மிக உபயோகமாக இருக்கும் என மனதில் அகவயப்படுத்தாமல் இருந்தால்......சரி.
க.செ

9 Apr 2015

எது கௌரவக் கொலை ?

அண்மையில் பெரும்பாலான வடமாநிலங்களிலும், பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண் தாழ்த்தப்பட்ட சாதி ஆணை திருமணம் பண்ணிவிட்டால் ‘ லட்சுமணன் ’ கோட்டை மீறிய பெண்ணை எப்படியும் கண்டு பிடித்து பெண்ணின் தகப்பனாரோ, உறவினரோ அப்பெண்ணைக் கொன்றுவிடுவதற்கு பத்திரிக்கைகள் கொடுத்துள்ள பெயர்தான் ‘ கௌரவக் கொலை ‘ ( honour killing ).
          கௌரவம் என்பது ஒரு நம்பிக்கை சார்ந்ததுதானே; விழுமியம்தானே. கௌரவம் என்பது ஏதோ Real  மாதிரியும் / எதார்த்தம் மாதிரியும், அதைப் பறிகொடுத்தவர்-பெண் தந்தை-இழந்ததை மீட்பதற்காக தன் மகளைக் கொன்று / தீ வைத்து கௌரவம் மீட்டெடுக்கப்படுவது மாதிரியான சித்தரிப்புத்தானே.
          கௌரவம் அடிப்படையில் மனம் ’ சார்ந்ததுதானே.

          வக்கிர சுயமோக காயத்தால் ஏற்பட்ட பாதிப்பால்( affect ) ஆதார இச்சையின்( Id ) உந்தலால், மற்றமையின் ( Other ) அதாவது சமூகக் கலாச்சாரம் இப்படி நடப்பதை-கொலை செய்வதை-விரும்புவதாக கற்பனை செய்து கொண்டு ( fantasize ), கொடூரத்திற்கு அந்தத்தன்னிலை ஆட்பட்டு, மகளை அழித்தொழிக்கிறது. இதில் எங்கே கௌரவம் இருக்கிறது? சாதியே ஒரு புனைவுக் கலாச்சாரத்தால் / தந்தை அதிகாரத்தால் / மொழியால் கட்டப்பட்டு, ஊட்டிவளர்க்கப்பட்டு, ஒரு பெயரும், அவன் / அவளுக்கு சாதி அடையாளமும் பிதுரார்ஜித சொத்தாக எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. கௌரவம்  என்பது   மனம் ; நம்பிக்கை. அவ்வளவே.         
          ஆனால் , தமிழகத்தில் கௌரவ கொலைகளே இல்லையென்று தமிழக முதல்வர் அறிவித்துவிட்டார். ( ஏற்கனவே தமிழகத்தின் கௌரவமே கொலை செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணர முடியாதவராக இருப்பவர் நிஜக் கொலைகளையும் மறுத்துவிட்டார் ).
          சாதாரணமாக, தன் மகளைக் கொல்வது என்பது சட்டப் பிரச்சினை, கொலைக் குற்றம், கோர்ட், தூக்கு, ஆயுள் தண்டனை, போதும், போதும்.
          ஆனால், தாழ்த்தப்பட்ட சாதி ஆணை மணந்ததற்காக பெண் கொலை செய்யப்படுவது என்பது முற்றிலும் வேறானது. முதலில், கொன்றது மகளை மட்டுமல்ல; மனித நாகரீகத்தையும் சேர்த்துத்தான் அது நடக்கிறது.
          இந்தக் கொலை மூலம் யாருடைய கௌரவம் காக்கப்படுகிறது?
          மனிதன் பிறக்கும்போது எந்த அடையாளத்துடன் பிறக்கிறான்? அடையாளம் என்பதுவே ஒரு கண்ணாடிப் பிம்பம்தானே ( illusion ) ; கானல் நீர்தானே?
          லக்கானின் மொழியில் சொன்னால், மனிதர்கள் ( human beings) உள்ளார்ந்த அல்லது
உண்மையான அடையாளம் எதையும் கொண்டிருக்கவில்லை ” (do not have an inherent or true identity ).                            
          லக்கானைப் பொருத்தவரை, மனித தன்னிலையாக்கமானது ( human subjectivity ) தனிமுதலான ( original ) அடிப்படையான ( radical ) அடையாளம் இல்லாமை ( lack of identity ) என்பதைக் கொண்டு விளக்கப்படுகிறது. நாம் யார் என்பதை நமக்கு நாமே புரிந்து கொள்வதற்கும் உள்வாங்குவதற்கும் முயற்சிக்கிறோம்.
           இப்படியாக இருக்க விருப்பம் ’ ( want to-be ) என்கிற மனிதர்களைப் பற்றி லக்கான் குறிப்பிடுகிறார்.
          அடையாளப்படுத்திக் கொள்ளல் ( identification ) என்பது குறிப்பான அகவுணர்வு முழுமையை அடைவதற்கான ஒரு வழிமுறையாகும் ( identification is a means of acquiring a greater subjective completion ).
          ஆனால், ஒரு அடையாளத்தைப் பெறுவதற்கு ஒருவர் மற்றொருவரை நாடவேண்டியது அவசியமாகிறது. ஆக, மற்றொரு நபருடன் உறவு கொள்ளும்போது மட்டுமே ஒருவரால் தனது அடையாளத்தைக் கோர முடியும். (லக்கான் 1979 )
          மீண்டும் இதை ஒருமுறை படித்துக் கொள்ளவும்.ஒரு கொலைக்கான தூண்டல், சக ஜாதிக்காரர்களின் அங்கீகாரத்திற்காக மகளைக் கொன்றுவிட்டு தன்மீது படிந்த  ஈனத்தை ’ கழுவிவிட்டதான illusion, delusion -ல் எஞ்சிய வாழ்வை மார்தட்டித்திரியலாம்
          மற்றொன்றும் கவனிக்கவேண்டிய ஒன்று.
           பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்டவர்களுக்கிடையிலான (BC,SC) ஒப்பந்தத்தை மாப்பிள்ளைப் பையன், மகள் மீறிவிட்டதாக எஜமானத்துவம் அடிமைகள் மீது (மகள், தாழ்த்தப்பட்டவர்கள்) பாய எத்தனமும் ; சாதி ( master signifier ) அடுத்த தேர்தலுக்கான அமைப்பு வேலையாகவும் இதைக் கருதக்கூடும்.
          கொலைகளைத் தடுக்க கூடுதல் சட்டம் கேட்பது ஒருபுறம் சரி.
          மறுபுறம், இதை சட்டஒழுங்குப் பிரச்சனையாக குறுக்கக் கூடாது ( இது பொருளாதாரவாதம் ).
          ஏனெனில், இது போன்ற திருமணங்கள்  புதிய  விடியலுக்கான ஒரு  குறியீடாகக் கூட  
( symptom )   இருக்கலாம். யார் கண்டது. விழித்துப் பார்ப்பதற்கு, உற்றுக் கேட்பதற்கான நேரம் இது.
          வீட்டில் கலாச்சார விதிகள் மீறப்படும்பொழுது ,
          மாற்றத்திற்கான முயற்சி அல்லது வேறு ஒரு அமைப்பு முறையில் ( frame ) குடும்பக் கட்டமைப்பிற்கு தயாராவது, சாவுக்கும் தயாராய் இருப்பது ஒரு  குறியீடு  ( symptom ) இல்லையா?
          இதை நவசக்திக்கான குறி ( sign ) என்று ஏன் நினைக்கக்கூடாது? .
          பெண்களுக்கு, தங்கள் தேவையை ( demand ) தாங்களாகவே தீர்மானிக்கும்     Symbolic Phallus ( குறியீட்டு அதிகாரம் ) வேண்டும்.
          பெண்களுக்கு மகிழ்வு [ jouissance ] சுதந்திரம் வேண்டும். காமசுகம் அல்ல.
          நாம் ஒரு புதிய துவக்கத்திற்காக காத்திருப்பதும் ; சாதியத்தை, தந்தை அதிகாரத்தை மீறும்பொழுது உடனடியாக ஒரு காத்திருக்கும் வீடு, தைரியம் சொல்லி, உடனடி உதவிகள் அளிக்க புதுயுக நண்பர்கள் முன்னணி வேண்டும்.
          இந்த புதிய பறவைகளுக்கு ஒரு புதிய உலகு-தங்களைத் தாங்களே தீர்மானித்துக் கொண்டு, சமூக உறவு கொள்ள-அமைப்பும், அது பற்றிய கனவுடன் புறப்படும் அவர்களை ’குலவை’ போட ஆள் இல்லாவிட்டாலும், ஒரு big hallo ’ சொல்ல, வாழ்த்த, புன்முறுவலுடன் காத்திருக்கும் ஒரு நவயுகத்திற்கான முன்னணி தமிழகம் முழுவதும் அமைப்பதற்கான, விவாதிப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
          வாருங்கள்.விவாதிப்போம்.
          [ குறிப்பு : இநத கௌரவக் கொலை என்ற வார்த்தைக்குப் பதிலாக சித்தத்தையும் வெளிப்படுத்துவதுமாதிரி ஒரு புதிய வார்த்தையை கண்டுபிடிக்கலாமே ] 
க.செ
7-4-15

11 Mar 2015

இவர்களில் யார் குற்றவாளி ?


B B C-யின்...?
“A girl is far more responsible for rape than boy”.
            இதைச் சொன்னவன் பெண்ணை-அவளை-உடலாக மட்டும் பாவிக்க, அனுபவிக்க அவன் சூழலால்,மொழியால் வழிகாட்டப்பட்டவன்.

            அவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவன். ஆனாலும் மேலே கூறிய பேச்சு அவன் பிரக்ஞைபூர்வமாகக் கூறப்பட்டிருக்கிறது.Boy ’என்று கூறியது பொதுவான ஆளையல்ல.தன்னைத்தான் ‘ Boy ’ என்கிறான். அவன் திமிராகப் பேசவில்லை. அவன் நனவிலி(unconscious) ஆசையைத்தான் நிறைவேற்றிக்கொண்டான் (தடை செய்யப்பட்டது).ஆனால், தடை செய்யப்பட்ட ஆசையை மீறுவதற்கான தூண்டல்,மயக்குதல் அதிகமா? அல்லது சமூக ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கத் தூண்டும் முன்மாதிரிகள் அதிகமா? ( சினிமா,சின்னத்திரை, நுகர்வுக்கலாச்சார விளம்பரங்களைப் பார்க்க ).
      சமூகப் பிரக்ஞையில் கூட பெண் என்பவளை Grandeur Self ஆகக் காட்டுவது ( காளி, பராசக்தி,லெட்சுமி ); பெண் அப்படியாக இருக்கவேண்டும் என்ற ஆசையின் புனைவுதான் (Fantasy) அது.
      ஆனால்,எதார்த்தத்தில் பெண்களை தன்னிலைகளாகப் பார்ப்பதில்லை.மாறாக, ஆசைக்கான பொருளாகப் (object)  பார்க்கப்படுவதுதான் எதார்த்தம்.
            டெல்லியில் தினந்தோறும் ஐந்து பெண்களாவது வல்லுறவிற்கு ஆளாகிறார்கள் ”.
                                                        –www. New Indian Express.com.5-3-2015.
      [ அதாவது கேஜ்ரிவால் முன்னுள்ள பிரச்சினையாக்கப்பட்டுவிடும் இனி ]
      மேலே படித்தது, டெல்லியில் அன்றாட வாழ்வின் ஒரு அங்கம் அது.
      அந்தக் குற்றவாளியின் சொந்த வார்த்தை அல்ல அது.
            பலாத்காரத்திற்கான பொறுப்பு பெண்ணுக்குத்தான் அதிகம்? ஏன்? சமூகத்தில்,மொழியில் உள்ள மற்றொரு பரிமாணம் “ Sexual hierarchy ”. –பாலினப் படிநிலைஅமைப்பில் ஆண்கள் உச்சாணியில்.
            மொழியில் ( நாவலில்) “ எல்லாப் பொம்பளைகளும் இன்னிக்கி தேவடியாள்தான் ”.
      இதை ஆண்கொழுப்பு என்பதா? அல்லது படைப்புச் சுதந்திரம் என்பதா?

      அந்தக் குற்றவாளிக்கான வக்கீலின் கூற்று இன்னும் ஒருபடி மேல். அவருடைய லட்சியம் (ideal) இப்படிச் சொல்லுகிறது:
     தெருவில் இனிப்பை வைத்தால் நாய் வந்து தின்னத்தான் செய்யும் (வக்கீல் சர்மா)
                                                   -www.Times of India.indiatimes.com              
      இரவில் பெண் நடமாடினால் மிருகங்கள் அவர்களை தின்னலாம் என்கிறார் வக்கீல்; அவர் (இன்னும் நிறைய பேர்) வயிறு மட்டும்  இருக்கும் ஆசாமி. புலி வேட்டைக்கு ஆசி கூறுபவர்கள் இவர்கள்.
      A.P. சிங் என்ற மற்றொரு வக்கீல் சிந்திய புனிதம் :-
      என் மகளோ அல்லது தங்கையோ திருமணத்திற்கு முன் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், அவமானப்படுத்தப்பட்டிருந்தால், நான் நிச்சயமாக, அவளை என் தோட்டவீட்டில் வைத்து,என் குடும்பத்தார் முன்னிலையில்,பெட்ரோல் ஊற்றி,தீவைத்து கொளுத்திவிடுவேன் என்கிறார்.                                                                                      www.in.news.yahoo.com
            ஜாக்கிரதை. இந்தப் புனிதவாதம்தான் தினந்தோறும் நடக்கும் கௌரவக் கொலைக்குத் தூண்டுகோல் / காரணம். இதுதான் காரணம். இந்த வல்லூறுக் கலாச்சாரத்தின் தொற்று இங்கிருந்து தான் நாடெங்கிலும் பரவுகிறது. இதை நடைமுறைப்படுத்துபவன் வெறும் கிரிமினல் குற்றவாளி.
      இந்தக் கருத்துருவங்களை பரப்பும் நெறி (ஒழுக்கமல்ல) யற்ற தன்னிலைகளை இ.பி.கோ. என்ன செய்யும் ? 
                  பெண்ணாகப் பிறப்பதில்லையாம். பெண்ணாக ஆக்கப்படுகிறாளாம்  .
      யாருக்காக? ஒரு தாவரம். பூ கூட முதலில் தன்னைத் தானே விருத்தி செய்துகொள்ளத்தான் பூக்கிறது. ஆனால், பெண் ?
     
பெண் மீது பலாத்காரம் செலுத்துபவன் மட்டுமே குற்றவாளி என்று தண்டிப்பது  அவன் செயலுக்கானது. இம்மாதிரியை நியாயப்படுத்தும் விழுமியங்களையும், கருத்துக்களையும் அன்றாடம் பரப்பும் மொழியை என்ன செய்வது ?

      இம்மாதிரி ( குறிப்பான்கள் ) மொழியில் இல்லாவிட்டால் இனியாகும் மனிதர்களில் (ஆண்-பெண்) உடல் வித்தியாசம் மட்டும்தானே மிஞ்சும். மேலாண்மை அதிகாரம் இருக்காதல்லவா? விவாதிப்போம்.
க.செ
©the author