17 Mar 2014

சித்திரமா?சின்னமா?


குறி மற்றொரு கருத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது ”-ஜுலியாகிறிஸ்துவா.


       இது அசாதாரணமான காலம்.ஆனால் போர்க்காலம் அல்ல;ஆனால் அது போன்றது.ஏன்? இதுநாள்வரை உறங்கிக்கொண்டிருந்த சட்டங்கள்,அதன் நடைமுறைகள் உசுப்பப்பட்டு எழுந்து சாலைகளில் நின்று கை காட்டும்;கார்,சிற்றுந்து,பேருந்து போன்றவைகளில் வரும் பைகளும் சூட்கேசுகளும்கூட சோதனை செய்யப்படும்.
இத்துணைக்கும் காரணம் தேர்தல்.தூசி தட்டுவது என்பதெல்லாம் தேர்தல் ஆணையம் என்ற அரசு அமைப்புதான்.
இந்த அமைப்பு இப்போது விழித்தெழுந்துள்ளது
உயர்நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், 
அரசு ஸ்மால் பஸ்களில் இடம் பெற்றுள்ள இலை ஓவியங்கள் அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னத்தைப் போன்று உள்ளன. ஆகையால் அவற்றை மறைக்கத்தேவை என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.”-தினமணி.15-3-2014.
எதுவரை மறைக்கவேண்டும்,எப்பொழுதுமா?என்று கேள்வி எழுப்பினால்;இல்லை,இல்லை; தேர்தல் அறிவிக்கப்பட்டு,அது முடிவுறும்வரைதான் என்று பதில் வரும்.அப்படித்தானே!
ஸ்மால்பஸ் என்பது என்ன?இம்மாதிரி மக்கள் தங்கள் அன்றாடவாழ்வில் ஸ்மால் பஸ்என்னும் ஒலியால் எந்த பஸ்ஸையாவது அடையாளப்படுத்துகிறார்களா?இல்லையே!
பின் ஏன் ‘ஸ்மால்’?
அது அரசியல் விளையாட்டு; IPL விளையாட்டுப்போல; இந்த இன்னிங்ஸின் over இப்படித்தான், ‘ஸ்மால்பஸ்;எதிராளி இன்னிங்ஸ் என்றால்,'மினி பஸ்';சிற்றுந்துஎன்று பந்து வீசப்படும்,
இதெல்லாம் எந்த அணி பந்துவீசுகிறது என்பதைப் பொருத்துத் தீர்மானித்துக் கொள்வார்கள். (இது அவசரகால விதிகள்).
சாதாரணகாலத்தில் அரசு அதிகாரம் அரசாங்கத்தின் கையில் (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது) ( அரசு ஊழியர்கள் ஆளும்கட்சி விசுவாசிகள் ஆகிவிடுவர்). அரசாங்கத்தின் அதிகாரம் செல்லுபடியாகும்போது மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய பஸ்களில்-ஸ்மால்/ மினி/சிற்றுந்து-முதல் மந்திரிகளின் குடும்பப் போட்டோக்களைக்கூட போட்டுக் கொள்ளலாம். அரசு மௌனியாக இருக்கும் செயல் இழந்து. தேர்தல் என்றவுடன் அது விடைத்துக் கொள்ளும் .
 மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து ,பார்த்து,துப்பறியும் படம் போல் ஆவலாய் கண்டு களித்துத் துயில்வார்கள் .
ஆக, இது ஒரு நிலாக்காலம்.ஆகவே தேர்தல் ஆணையம் விழித்திருக்கிறது.
ஆகவேதான் ஸ்மால் பஸ்களில் இடம் பெற்றுள்ள இலை ஓவியங்களை மறைக்கப்பட ஆணை இட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.
ஆனால்,ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவில் அரசு சிறிய பஸ்களில் வரையப் பட்டுள்ளது இரட்டை இலைச்சின்னமே அல்ல. இரட்டைஇலைச் சின்னத்தில் இரண்டு இலைகள் மட்டுமே இருக்கும்.
இரட்டை இலைச் சின்னத்திற்கும் அரசு பஸ்களில் வரையப்பட்டிருக்கும் இலைகள் படத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.- தி இந்து 15.3.2014
ஒரு கட்சித் தலைவி J பார்க்கும் கோணத்திலிருந்து பார்த்தால் J சொல்வதில் பொருள் உள்ளது.
தேர்தல் ஆணையம் சொல்லும் கோணம் மற்றொரு கோணம். இது தெரியும்தானே! .
இனி நீதிபதியின் கோணம் எப்படியோ? காத்திருக்கவேண்டும்.
நாம் வழக்கில் தலையிடக்கூடாது.
பொதுவாக, மக்கள் குறிகளை(sign) எப்படிப் புரிந்து கொள்கிறார்கள்.
குறிகள் / symbols எதைஎதையெல்லாம் உள் அடக்கியது போன்ற சாரசரி வாழ்விற்கு வரலாம்.
தேர்தல் கூட்டத்தில் அல்லது எந்தவகைக் கூட்டத்திலும் அதிமுக ஸ்தாபகர் M.G.R மேடையில் ஏறியதும் இரண்டு விரல்களை-சுட்டுவிரலையும் நடு விரலையும்-உயர்த்தியும்,  மற்ற விரல்களை மடக்கிக் கொண்டு கையைத் தூக்குவதும்;அதில் சுட்டுவிரலும் நடுவிரலும் விரிந்து இருக்கும். அது ஆங்கில எழுத்து V மாதிரி தெரியும். அத்தோடு அது இரட்டை இலை சின்னத்திற்கான குறியாகவும் (sign)ஆக்கினார் அக்கட்சியின் ஸ்தாபகர்.
இப்போது அவர் உயிருடன் இருந்து, லண்டன் விமான நிலையத்தில் British Airways-ன் முதல்படியில் நின்று ....கூட்டம் அங்கிருந்தால் அவர் வழக்கம்போல் இரட்டை விரலை தூக்கிக் காட்டினால் பார்க்கும் கூட்டம் அதை எப்படி வாசிக்கும்?எப்படி உணரும்.
ஆங்கிலேயனும் ஐரோப்பியனும்மேற்கத்தியர்-இது என்ன? யார் இவர்? .... சர்ச்சிலின் புகழ்பெற்ற(வெற்றி) சின்னத்தைக் காட்டுகிறார் ஏன்?குழப்பி .. பித்துப்பிடித்தவர்கள் ஆவார்கள் அவர்கள்.
தமிழகத்திற்கு ஒரு ஆங்கிலேயன்(சர்ச்சில்)சென்னை விமானத்தில் இறங்கும்போது  Vவடிவச் சின்னத்தை கையில் காட்டினால் நகைச்சுவை கலக்கல் காமெடி சீன் ஆகிவிடும்.
ஆக, சின்னம் என்பது அமைப்பியல் சார்ந்தது;மொழி, கலாச்சாரத்துடன் உறவு கொண்டது; அத்துடன் காலமும் கணக்கில்வரும்.
அரசு வாகனங்களில் இலையைப் பார்த்தவுடன் நினைவுக்கு வருவது என்னென்ன? மனத்தில் தோன்றும் எண்ணங்கள் எத்தனை வகை?அப்புறம் தான் எத்தனை இலை, வடிவ ஒற்றுமை, வேற்றுமை, இன்ன பிற.
தமிழக வீதிகளில் யானைப் படம் cut out-டாக ஆயிரக்கணக்கில் நிற்கும்போது அது ஒரு கட்சியின் சின்னம் என்று எத்தனை ஆயிரம்பேருக்குத் தெரியும்(அரசியல் நோக்கர்களை கழித்துவிடவும்).
ஆக, குறி யாரையெல்லாம் கட்டுப்படுத்தும்? குறி யாரையெல்லாம் ஈர்க்கும்?குறியின் கூவல்/ஓல/command-ஐ வாசிப்பதும் அர்த்தப்படுத்துவதும் அந்தஅந்த கலாச்சாரம், மொழி சார்ந்தது.
ரோட்டில் போகும் ஒரு விவசாயிக்கு வயலைப் பார்த்தவுடன் ஏற்கனவே மனதில் பதிந்து உள்ள வேறு பச்சை வயல்தான் நினைவுக்கு வரும்.
(பிரக்ஞையாக அறியும் முன்னரே நனவிலி வந்து அதனுடன் சேர்ந்து கொள்கிறது). ஆகவே இந்த வழக்கு கலக்கல் காமெடி போல் காட்சி அளிக்கிறது.
ஏனென்றால் தேர்தல் ஆணையம் தன் வழக்கில் கூறியதை சற்று உற்றுநோக்கினால் வேடிக்கை புரியும்.
...இடம்பெற்றுள்ள இலைஓவியங்கள் [அது குறி(sign) இல்லையாம் .படம் தானா....ம்]அதிமுக வின் இரட்டை இலை சின்னம்போல் ..
எங்கும் யாரையும் குற்றம் சாட்டவில்லை. எங்களுக்கு மனசுல பட்டத சொல்றோம் என்கிற மாதிரி உள்ளது இது.
[..செயல்களைக் காட்டிலும் அச்செயல்கள் செய்பவனுடைய உளப்பாங்கே முக்கியம்].
தேர்தல் ஆணையம் எந்த நூற்றாண்டு முறையில் இயங்குகிறது.
குறி/sign; symbolism ,சின்னம், உருவகம் போன்றவற்றை கட்டுடைக்கஇங்கு மொழியியல்/ கல்வித்துறைகள்,கல்விமான்கள் இல்லையா என்ன?.
மக்களுக்கு மேற்கூறியவைகள் தேவையில்லை. அவர்கள் அந்த இலைஎதைக் குறிக்க வரையப்பட்டது; அந்தப் படத்தின் கோரிக்கை என்ன என்று உணர்ந்துதான் உள்ளார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் குறி என்பது சமூகக் கரணை. அது மக்களை ஆணையிடுகிறது; ஒன்றுதிரட்டுகிறது; அமைப்பாக்கத்திற்குள் செயல்படுத்துகிறது.
ஆகவே அத்வானத்தில் வண்ணமும் இல்லை; இலையும் இல்லை.
க.செ.


No comments:

Post a Comment