15 Aug 2015

‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு ’

மாரிக்கால பாராளுமன்ற கூட்டம் எதுவும் செய்யாமல் கூச்சல், குழப்பம், சகதியை மாறி மாறி  எறிதல் செயல்களை தொழுவத்தில் நடந்தேற்றி, மக்கள் வரிப்பணம் 25 கோடியை நாசமாக்கிவிட்டது . இந்த முதலாளிய ஜனநாயகத்திற்கு விரோதமான  EVIL  சக்திகள்.  மக்களின் வரிப்பணத்தை சூரையாடிய இந்த தீவினை சக்திகளை Media - க்கள் தங்களின் சார்புக்கேற்றார்போல் விமர்சிப்பதும், ஆதரிப்பதுமாகவும் உள்ளன.  இந்தத் தீ சக்திகள் முக்கியமாக வெளிப்படக் காரணம் சுஷ்மா.
அவரின் பேச்சு - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் பேசியது,
.... லலித் மோடியின் மனைவி 17 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.  என்னுடைய இடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று நான் கேட்க விரும்புகின்றேன்.  லலித்மோடியின் மனைவி சாகட்டும் என்று விட்டுவிட்டிருப்பாரா?  லலித் மோடியின் மனைவி போன்ற பெண்ணுக்கு உதவி செய்வது குற்றம் என்றால், ஆமாம் நான் குற்றம் செய்தேன் என்று இந்த அவையில் ஒப்புக்கொள்கிறேன் நாடாளுமன்றம் எந்த தண்டனை வேண்டுமானாலும் எனக்கு வழங்கட்டும்
      .....இது முழுக்க முழுக்க மனிதாபிமான முறையில் எடுத்த நடவடிக்கைதான் .
                                                            -தி இந்து 7.8.15
எந்த நடவடிக்கையை மனிதாபிமான முறையில் எடுத்த நடவடிக்கை என்கிறார் அமைச்சர். 

      இந்த அரசால் தேடப்படும் குற்றவாளிக்கு இங்கிலாந்திலிருந்து போர்ச்சுகலுக்கு செல்ல   Passport வழங்குவதில் அமைச்சர் அரசாங்கத்திற்கு தெரியாமல் உதவியிருக்கிறார்.  இச்செயலை மனிதாபிமானம் என்கிறார் சுஷ்மா?
      அவர் மனிதாபிமானம் என்று பேசி கேள்வி எழுப்பியதற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய எதிர்வினை இதுதான்  - மனிதாபிமான உதவிகள் பற்றி, நான் கேள்விப்பட்டுள்ளேன், ஆனால், சுஷ்மா சுவராஜ் செய்த மனிதாபிமான உதவி பற்றி நான் கேள்விப்படவே இல்லை.
      ஏனெனில், அந்த உதவி ரகசியமாக செய்யப்பட்டது
                                                      -தினமலர் 13.08.15.
      ராகுல் , சுஷ்மாவின் செயல் ரகசியமாக செய்யப்பட்டது .  ஆகையால் இது மனிதாபிமான செயல் என்பதை மறுக்கிறார் எனலாம்.
      ராகுல், சுஷ்மாவின் சொல்லாடலை விட்டு விலகிப்போய் ரகசியம் என்ற பெயரில், சுஷ்மாவின் மனிதாபிமானத்தை மறுக்கிறார்.  இது வழமையான அரசியல்வாதிகளின் அணுகுமுறைதான்.
      சுஷ்மாவின் சொல்லாடலை, தன் செயலை மனிதாபிமானம்   என்று ஏன் முன் வைக்கிறார்?  அதில் உறைந்துள்ள விசயங்கள் என்னென்ன?  என்று கேள்வி எழுப்பினால்...? வழமையான கருத்தியல் இதற்கு பதிலளிக்காது.
      ஆகவே இந்தச் சொல்லாடலை கட்டுடைக்க மொழியியலின் ஒரு அலகான Symbolism-த்தை தன்னகத்தே கொண்டுள்ள லெக்கானிய மனஅலசலை ஆய்வுக்கருவியாய் கொள்ளும் பொழுது அந்த ”  மனிதாபிமானம் கட்டுடையலாம்.
      இந்த குறியியலை கோட்பாடாக்கியவர் எர்னஸ்ட் ஜோன்ஸ் என்னும் புகழ்பெற்ற  பிரெஞ்சு உளப்பகுப்பாய்வாளர் ஆவார்.
      வாசகர்கள் மனிதாபிமானம் “ என்ற குறிப்பான் எந்த இடத்தில் நுழைகிறது என்பதை சற்று கூர்மையாகப் பார்க்க வேண்டும்.  இங்கு மனிதாபிமானத்திற்கு என்று சொன்னவுடன் /  குறிப்பிட்டவுடன் நமது நனவிலியில் ஒரு காட்சி வெளிப்பட்டுவிடுகிறது, அதாவது மனிதாபிமானமென்பது எந்த விதிகளாலும் அளவிடமுடியாது; எல்லா விதிகளையும் மீறியது, இது நியாயமானது என்பதுதான் அது. 
சுஷ்மாவின் சொல்லாடலில் செய்த செயல்களுக்கான விளக்கமாக, அது மனிதாபிமான முறையில் எடுத்த நடவடிக்கைதான் என்கிறார்.  அதாவது அவருடைய செயலுக்கான உருவகமாக மனிதாபிமானத்தை முன்வைக்கிறார்.
      இப்போது அச்செயல் அரூபமாக, மிகப் பொதுவானதாக, உலகு தழுவியதாக மாற்றப்பட்டுவிட்டது.  அவரின் செயலின் ( பாஸ்போர்ட் வழங்க ஒத்துழைத்தது ) ஒரு பகுதி தற்போது மனிதாபிமானம் என்ற முழுமைக்குள் ஒரு பகுதியாக அடக்கப்பட்டுவிடுகிறது. 
இதனை லெக்கானின் வார்த்தைகளில் சொல்வதானால்,
ஒரு குறித்தல் சங்கிலியில் வேறொரு குறிப்பானை பொருத்துவதை உருவகம் எனலாம்; அக்குறிப்பான் குறிப்பீடாக ஆகிறது; அந்த உள்ளார்ந்த குறிப்பான் ஒரு இடைவெளியைத் தோற்றுவிக்கிறது.  இதன் மூலம் வேறொரு குறித்தல் சங்கிலியை உருவாக்க முடியும் -  Ecrits
ஆக, சுஷ்மாவின் நனவிலியில் மனிதாபிமானம் என்பது பிறரால் வழங்கப்பெற்று அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது ; அந்த மனிதாபிமானத்தின் வழியாக பிற இந்திய மக்கள் பார்க்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ( Desire  ) .  இங்கு மன அலசல் மொழியில் சொன்னால் “ The Unconscious thought process  interpreted as linguistic process ” - Lacan (அதே நூல்).  இன்னும் செறிவாக சொல்வதானால், “ Man’s  desire finds its meaning and sense in the desire of the Other ” (Ecrits, P.268). மேலும், மனிதாபிமானம் என்பது சுஷ்மாவைப் பொறுத்தவரை நோய்க் குறியாக இருக்கிறது.  அதாவது  ‘ a symptom is structured as language ’.   ஏனெனில் லலித் மோடியின் கடந்தகாலத்தைப் பற்றி இவர் எந்தவிதத்திலும் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் ,  So called  பின் நவீன உலகில், வெளியுறவு அமைச்சுக்கு தெரியாமல் செய்த பாஸ்போர்ட்டுக்கான உதவியானது , மனைவியின் கொடுந்துன்பம் ஆற்றுதலுக்கான மனிதாபிமான செயலாகிவிடுமா என்ன?
இறுதியாக, அவருடைய கூற்றில் மனிதாபிமானத்திற்கான தடம் ஏதும் தெரியவில்லை.  இது ஒருபுறம் இருக்க இந்த பிரச்சனைக்கு ‘ Ethical approach   என்பது அவரிடம் துளியும் இல்லை என்றே சொல்லலாம்.

பின்குறிப்பு.:-
நெறி ( Ethics ) என்பது அறம், ஒழுக்கம் போன்றவைகள் அல்ல ; மாறாக, பேசப்படும் Issue -ஐ “  நோக்கும் முறைமை ( attitude )   சார்ந்ததாகும்.
                                                                     -க.செ.
14-8-2015

30 Jun 2015

உயர்கல்வி மாணவர்களுக்கு தேவையான சமூக அரசியல் ஞானம்-ஸ்லவோஜ் சிசாக் - பேட்டி

மிகச் சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி-யின் உயர்கல்வி மாணவர்களின் அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர்களின் அமைப்பு  பி ஜே பி. அரசால் தடை செய்யப்பட்டது. மாணவர்கள் மற்றும் சில ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் தடை ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் உரிமை மீட்டெடுக்கப்பட்டது. இது சமீபத்திய வரலாறு.
       அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்த ஸ்லவோஜ் சிசாக் ( Slavoj ZiZek ) என்ற அறிஞருடன் முறையே 14, 15 வயது மாணவி தாரா ரகுவீர் ( Tara Raguveer ) , மாணவர் ப்ராட்லி ஜி. பால்மன் ( Bradey G.Bolman ) நடத்திய பேட்டியை சுருக்கி தமிழாக்கம் செய்து  மற்றமை வாசகர்களுக்குக் கொடுக்கிறது.
உயர்கல்வி மாணவர்களுக்கும் தேவையான சமூகம் பற்றிய அரசியல் ஞானமும், அக்கறையும் விவாதப் பொருளாக இருப்பதால் இங்கு தரப்படுகிறது .                          

                                       ஆசிரியர்

FIFTEEN MINUTES (FM) :     இன்றைய உலகளாவிய நெருக்கடிகளில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ள உயர்கல்விப் புலத்தின் ( academia ) பங்கு என்னவாக இருக்க வேண்டும்?
SLAVOJ ZIZEK ( SZ ) :    ஒருவகை நடவடிக்கைக்குத் தேவையான உத்வேகமும் ( practical sprit ) போராட்டங்களும் ஏதோவொரு விதத்தில் மீண்டும் உருவாகியுள்ளன. இச்சூழலில் ஒரு சில முற்போக்கான உயர்கல்விப் புலங்களில் கோட்பாட்டின் மீது நம்பிக்கை இழக்கும் போக்கைப் பார்க்கின்றேன்.
       இது ஒரு ஆபத்தான விசயமாகும்.  மக்கள் போராடியாக வேண்டிய சூழலில் ஹெகல், தர்க்க அறிவுக் கோட்பாடுகள் யாருக்குத் தேவை?
என்கிறார்கள் இவர்கள்.
       விசயம் அப்படியில்லை. நான் மேற்கூறியதில் முரண்படுகின்றேன். ஒவ்வொரு பட்டறிவு உதாரணமும் கோட்பாட்டை குறைத்து மதிப்பிடுகின்றன என்பதை இன்றைய சூழலில் வலியுறுத்துவது அவசியமானதென கருதுகின்றேன். முழுஅளவிலான உதாரணங்கள் கிட்டவில்லை. ஆனாலும் இந்த உதாரணங்களை கோட்பாட்டிற்கு எதிரானவையாக திருப்பிவிட வேண்டியதில்லை.
       கோட்பாட்டிற்கு வெளியே உதாரணங்கள் எதுவும் இல்லை. கோட்பாட்டில் உள்ள ஒவ்வொரு உதாரணமும் தன்னளவில் கோட்பாட்டில் உள்ள முரண்பாட்டை குறிப்பிடுபவைகளே ; இங்குதான் முரணியக்க ஆய்வு ( dialectic ) துவங்குகிறது.
       ஹார்வர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் படிப்பதற்கு வாய்ப்புக் கிட்டியுள்ள நீங்கள் சோமாலியக் குழந்தைகள் பட்டினியால் மடிந்து கொண்டிருக்கிறார்கள் போன்றவற்றால் குற்றவுணர்வுக்குள் சிக்கிக் கொண்டு விடாதீர்கள். நீங்கள் இங்கு சிறப்பாக உள்ளீர்கள் என்பதால் சோமாலியக் குழந்தைகள் பட்டினியால் மடியவில்லை. குற்றவுணர்வுக்கு உள்ளாக வேண்டிய பலர் வெளியில் உள்ளனர். உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சமூகத்திற்கு அறிவார்ந்த விசயங்கள் மேலும் மேலும் தேவைப்படுகிறது. அறிவாளிகள் பொறுப்புகளிலிருந்து விலகி, தனிச்சலுகை பெற்றவர்களாக உள்ளனர் என்ற தலைப்புகளால் குற்றவுணர்வுக்கு உள்ளாக வேண்டாம். உங்களை குற்றவுணர்வுக்குள்ளாக்குவதற்கு குட்டி பூர்ஷ்வாக்கள்  மிக லாவகமாக பயன்படுத்தும் விசயங்கள் இவை.
       ஒரு  மிகச்சிறந்த கதையை எனக்குக் கூறியவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? இங்கிலாந்தின் மார்க்சியவாதி டெர்ரி ஈகிள்டன்தான் அவர். 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் எரிக் ஹாப்ஸ்பாம் ( Eric Hobsbawm ) என்கிற இங்கிலாந்தின் புகழ்பெற்ற மார்க்சியவாதியை அவர் சந்தித்துள்ளார். எரிக் ஹாப்ஸ்பாம் ஒரு வரலாற்றறி’ஞர். அவர் ஒரு தொழிற்சாலையில் கீழ்மட்ட தொழிலாளிகளிடம் பேசத் தொடங்கினார். தன்னை மேல்தட்டினராக காட்டிக் கொள்ளாமல் தொழிலாளர்களுள் ஒருவராக காட்டிக் கொள்ள விரும்பினர். அவர் நான் இங்கு உங்களுக்குத் கற்றுக் கொடுக்க வரவில்லை. அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே வந்துள்ளேன். நீங்கள் என்னிடம் கற்றுக் கொள்வதைவிட அதிகமான விசயங்களை உங்களிடம் நான் கற்றுக் கொள்ள முடியும் என்று பேசினார். அப்போது அவர் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாததொரு பதிலைக் கேட்டார்.
       ஒரு சாதாரணமான தொழிலாளி அவர் பேச்சில் குறுக்கிட்டார். கல்வி கற்பதற்கும், விசயங்களை அறிந்து கொள்வதற்கும் நீங்கள் எங்களை விடக் கூடுதல் வாய்ப்புகள் பெற்றவர்? நீங்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுக்க வந்துள்ளவர், நாங்கள் தான் உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும், நீங்கள் கூறியது போன்ற அபத்தமான விசயங்களை எங்களுக்குக் கூற வேண்டாம்; அவற்றை நாங்கள் அறிவோம் ; நீங்கள் கூடுதலாகக் கற்றுக்கொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் வாய்ப்புகள் பெற்றவர்கள் என்ற அர்த்தத்தில் நீங்கள் மேல்தட்டைச் சார்ந்தவர்களே. உங்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே உண்மையாகும்.இனியும் பொய்யான சமத்துவத்தை ( false egalitarianism )இங்கு பேசவேண்டாம்என்றார் அத்தொழிலாளி.
......ஐரோப்பாவில் உயர்கல்வியானது மேலும் மேலும் ஒருமுகப்படுத்தப்பட்டு ( streamlined ) வருகிறது என்ற அர்த்தத்தில் ஐரோப்பா ஒருவகையான அறிவுத் தற்கொலையை ( intellectual suicide ) நோக்கிச் செல்கிறது.
       40 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட்டுகள் அறிவாளிகளை நசுக்குவதற்கு விரும்பியபோது கூறிய விசயங்களையே இன்றைய ஐரோப்பியர்களும் பேசுகிறார்கள்.
அறிவாளிகள் உச்சாணிக் கொம்புகளில் ( ivory towers ) இருந்துகொண்டு,உண்மையான மக்களின், சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தேவையானதைப் பேசாமல் பூடகமாகப் பேசுகிறார்கள் என்கின்றனர்.
       சமீபத்தில் நான் ஒரு விவாதத்தில் கலந்துகொள்ள பிரான்ஸ்க்குச் சென்றபோது பிரான்ஸில் வாகன எரிப்புப் போராட்டம் ( car burning ) நடைபெற்றது.அதுகுறித்து என்னிடம் பேசிய மூத்த அரசியல்வாதி ஒருவர் கூறியது, பாரீஸ்-ன் புறநகர்ப் பகுதிகளில் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்படுகின்றன. உங்களுடைய பூடகமான மார்க்சிய கோட்பாடுகள் எங்களுக்குத் தேவையில்லை;கலகக்காரர்களை எப்படி அடக்குவது என்று கூறுகிற உளவியலாளர்களே எங்களுக்குத் தேவை;போராட்டங்களை சாத்தியமற்றதாக ஆக்குவதற்குரிய  வழிவகைகளைக் கூறக்கூடிய நகரமைப்பு வல்லுநர்களே எங்களுக்குத் தேவைஎன்றார்.
       ஆனால் இது வல்லுநர்களுக்கானது ( experts ).இன்று அறிவாளியாக இருப்பது என்பது வல்லுநர் என்பதைவிடக் கூடுதலானது ஆகும். வல்லுநர்கள் என்ன செய்கிறார்கள்? இவர்கள் மற்றவர்களால் வரையறுக்கப்பட்டவைகளைக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்கின்றனர்.ஒரு அரசியல்வாதி உங்களிடம் வந்தால் என்ன கேட்பார்? “ வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்படுகின்றன. இதில் உள்ள உளவியல் என்ன? இதனை நாங்கள் எப்படி வெற்றிகரமாகக் கையாள்வது?என்ற கேள்விகளையே கேட்பார்.
       ஆனால், ஒரு அறிவாளியோ இதற்கு முற்றிலும் வேறுபட்ட கேள்விகளையே கேட்பார்.
       இப்பிரச்சினையின் மூலம் என்ன? இந்த அமைப்பே குற்றவாளியா? என்ற கேள்விகளையே கேட்பார்.
       அறிவாளி,ஒரு கேள்விக்குப் பதில் கூறுமுன் கேள்வியை மாற்றுவார். இந்தக் கேள்வியை வரையறுப்பதற்கு இதுதான் சரியானமுறையா? என்று தன் கேள்வியைத் துவங்குவார்.
       FM : சமத்துவமின்மை / ஏற்றத்தாழ்வுகளுக்கும் ( inequality ), அவை உருவாக்கும் நெருக்கடிகளுக்கும் அமெரிக்க வலது , இடதுசாரிகள் விடை காணமுடியவில்லை என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்?
       SZ :         அதில் நான் உறுதியாக இருக்கின்றேன். ( last two seasons of “24” ) ” 24 ”களின் கடைசி இரண்டு பருவங்களை உற்றுக் கவனித்தால்,ஆர்வமூட்டக்கூடிய விசயங்கள் அப்போது நடந்துள்ளதைக் காணமுடியும்.அவை மேம்போக்கானவை ( superficial ) மட்டுமல்ல,அரசியல் ரீதியாகச் சரியானதும்தான் ( political correctness ). ஏழாம் பருவத்தில் நடந்த  முஸ்லீம் தாக்குதல்கள் சிலவற்றை ஜாக் பாவர் ( Jack Bauer ) ஆய்வு செய்தபோது அத்தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லீம்களே அல்ல என்றும், அமெரிக்காவின் மாபெரும் பாதுகாப்பு நிறுவனங்களே அத்தாகுதல்களை லாவகமாகக் கையாண்டனர் என்றும் கண்டுபிடித்தார். 24 களின் கடைசிப் பருவத்தில் சில மோசமான நிகழ்வுகள் நடந்தேறின. அவை எனக்கு ஆர்வமூட்டக்கூடியவை. இறுதியாக பாவர் ( Bauer ) இந்த அதிகாரத்துவத்தால் ( authoritative logic) மனமுடைந்துபோனார். அதாவது,வதைப்பது ( torturing ) போன்ற கேவலமான வேலைகளை ( dirty jobs ) மேற்கொள்ளவேண்டியிருந்தது.
       பாவர் பின்கண்டவாறு கூறினார், நான் ஒவ்வொரு விசயத்தையும் வெளிப்படையாகப் பேசியாக வேண்டும். அதனை சுமந்து கொண்டு என்னால் இனியும் வாழ முடியாது என்றார். ஆக, “  நாட்டிற்காக கடுமையாக வதைப்பது போன்ற கேவலமான வேலைகளைச் செய்வதற்குத் தயாராக உள்ளவர்கேளே உண்மையான கதாநாயகர்கள் என்கிற தர்க்கம் வெளிச்சத்திற்கு வந்தது. அவருடைய தாராளவாத எதிராளி ( liberal counterpart ) ஜனாதிபதி ஆலிஸன் டெய்லரும் கூட ( Allison Taylor ) இதனால் மனமுடைந்து  பதவியை விட்டு விலக வேண்டியதாயிற்று. ஆக, இறுதியில், முட்டுச்சந்து நிலை (deadlock ) குறித்து நேர்மையாக மதிப்பிடும்போது கிடைக்கும் விடை இதுதான். இன்றைய உலகளாவிய systemic co-ordinate      களில் நீங்கள் என்ன செய்தாலும் ஒரு முட்டுச் சந்து நிலைக்கே வருவீர்கள்.
       Pelican Brief , All the President’s Men   போன்ற படங்கள் மகிழ்வில் திளைக்கச் செய்யும் படங்களாகும் ( feel-good ). இப்படங்களின் மூலம் கிடைக்கும் செய்தி இதுதான். எவ்வளவு பெருமைக்குரிய நாடு இது. சாதாரணமான நபர்கள் இருவர் உலகின் மாவல்லமை பெற்ற ஒருவரை தூக்கியெறிய முடிகிறது என்பதுதான். இடதுசாரி, தாராளவாத  All the President’s Men or Jack Bauer ஆகியவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் ஜாக் பாவரையே தேர்வு செய்வேன். நான் இப்படிக் கூறுவதற்கு வருந்துகின்றேன். ஏனெனில், பிற்போக்கு- வாதிகளாக ( reactionaries ) இல்லாத நேர்மையான பழமைவாதிகள் ( honest conservatives) என்ன விரும்புவார்களோ அதனை அது செய்கிறது. பிற்போக்குவாதிகள் முட்டாள்களே ( stupids ) கடந்தகால விழுமியங்களை ( lost values ) கையிலெடுத்தால் அது பலனளிக்கும் என்று இவர்கள் கருதுகிறார்கள். தாராளவாதிகள் ( liberals ) முற்போக்கான முட்டாள்களாவார்கள் ( stupid progressives  ) . நேர்மையான பழமைவாதிகளிடம் ( honest conservatives ) நாம் எதைக் கற்றுக் கொள்ள முடியும் என்றால், அவர்கள் தற்போது நிலவும் முட்டுச்சந்து நிலையை ஒப்புக் கொள்ளத் தயாராக உள்ளவர்கள் என்பதைத்தான்...... 
……..    ஓரினப் பாலுறவாளர்களுக்கு மேலும் உரிமைகள், கருக்கலைப்புக்கு அனுமதி போன்ற இடது, தாராளவாத விசயங்களுக்காக(left. liberal things ) நாம் போராடலாம். ஆனால், அது மட்டும் போதாது. முரண்நகையாக ( ironically ) நான் இளைஞனாக இருந்தபோது மனிதாபிமான முகம் கொண்ட சோசலிசம் ( socialism with a human face ) குறித்து கனவுகள் கண்டோம. இவர்களோ இப்போது மனிதாபிமான முகம் கொண்ட முதலாளித்துவத்தை ( capitalism with a human face  ) நமக்குக் காட்டுகின்றனர். அதே அமைப்பு முறைதான் ஆனால் சற்று கூடுதலாக....
       இன்றுவரை வலிமையாக உள்ள இந்தத் தளைக்கட்டுகளை / சமூகக் கட்டுகளை (taboos ) நாம் உடைத்தெறிய வேண்டும். இதற்கான மாற்றுகள் ( alternatives ) குறித்து சிந்திக்கக்கூட ஒருவருக்கும் துணிவில்லை. ஒவ்வொருவரும் ஒருவிதத்தில், புகுயாமிஸ்ட்களாகவே  ( Fukuyamist ) உள்ளனர். உலகளாவிய முதலாளியமும் தாராளவாத ஜனநாயகமும் ( liberal democracy ) நீடிக்க வேண்டும் ; இன்னும் சற்று கூடுதலான ஆற்றல் கொண்டதாக அமைப்பு முறையில் மாற்றம் கொண்டுவருவதே இப்போது தேவை என்று முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும் ,  நாமும் ஒருவிதத்தில் ஒப்புக் கொள்கிறோம். விசயம் அப்படி இல்லை. நாம் சிந்திக்க துவங்கவேண்டும் என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது.
       இது மாபெரும் பொறுப்பாகும். ஏனெனில், 20ம் நூற்றாண்டு பொதுவுடைமைப் பெருமிதங்களுக்கு மீண்டும் திரும்புவதற்கு வழியேதுமில்லை. இந்தச் சமயத்தில் அறிவாளிகளாக உள்ள நமக்கு உள்ள கடமை இதுதான் : தளங்களைத் திறந்து விடுவது. அதே சமயத்தில் அடிமானத்தைத் தகர்ப்பது , நொறுக்குவது என்பது நமக்குள்ள கடமையாகும். இந்த விசயத்தில் நாம் அழிப்பவர்களாக ( very destructive ) இருக்க வேண்டும் ; பொய்யான மாயைகளைக் களைந்தெறிபவர்கள் என்ற அர்த்தத்தில் அழிப்பவர்களாக இருக்க வேண்டும்.
       அராபிய வசந்தம் ( Arab Spring ) , அல்லது அதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பெயரிடுங்கள், வரும் என்று யாராவது எதிர்பார்த்தார்களா? ஐரோப்பா கண்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை யாராவது எதிர்பார்த்தார்களா? ஆனால், அவை நடந்து கொண்டிருக்கின்றன. இவைகள் விரைவில் அடங்கிவிடும் என்றே மக்கள் ஆரம்பத்தில் கருதினர். ஆனால் அவை தொடர்கின்றன. திருப்தியின்மையில் மாபெரும் ஆற்றல் பொதிந்துள்ளது. ஆனாலும், இதுதான் எப்போதும் ஆபத்தானதும் கூட.
       FM : இந்த நேர்காணலுக்காக எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுடன் சேர்ந்து நாங்கள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா?
        SZ : சரி, சரி. நானே வெறுக்கின்ற இந்த அசிங்கமான முகத்துடன் ( stupid ) ஒரு புகைப்படமா? இப்புகைப்படத்தின் தலைப்பு  ‘ DUMB AND DUMBERஎன்பது போல்தான் இருக்கவேண்டும். எனது அசிங்கமான முகத்துடனா? அது கோரமான ஒன்று. உண்மையிலேயே கோரமான முகம் அது (  just horrible ) .

குறிப்பு : “ 24  என்பது பயங்கரவாதம் குறித்த அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடராகும்.


மெய்ப்பு                                                                        சுருக்கப்பட்ட மொழியாக்கம்
அ.பாலசுப்ரமணியன்                                                                    ஆ.பிட்சுமணி
அ.பார்வதி