3 Aug 2016

கபாலி

ப்போது பட விமர்சனம் இல்லை. 
                கபாலி படம் வரி விலக்குப் பெற்றது.  ஏனென்றால் , தமிழக அரசின் 2006-ன் முடிவின்படி தமிழில் படப்பெயரைச் சூட்டுபவர்களுக்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.  இது தமிழக அரசின் அதிகார முடிவு.

       தமிழக அரசின் முதல் மந்திரியாக ஒரு மலையாளியும் , கன்னடிகாவும்
 ( முடிந்தால் தெலுங்கும் வரலாம் ) வரலாமாம். ஆனால் , சினிமாவின் படப் பெயர் மட்டும் தமிழில் வேண்டுமா ?

       ஆயிரக்கணக்கில் , மெட்ரிகுலேசன் பள்ளிகளைத் திறந்து , CBSE etc., இனி தமிழ் மெல்லச் சாகும் ( சுஜாதா சொல்லில் ) என்பதற்கிணங்க அரசியல் செயல்பாடுள்ளது .  இனியாகும் எந்தத் தமிழரும் பிறப்பால் தமிழராகவும் , மொழியால் ஆங்கிலமாகவும் இருப்பர் . ( முதலில் எழுத்து மறையும் , பின்புதான் பேச்சு மொழி ) .  இன்றைய போக்கு பின்னைய நவீனத்துவ  உலகளாவியத்தில் , நுகர்விய முதலாளியத்தில் , அரசியல் பொருளாதாரம் விதித்த விதி இது .

       ஆக , சினிமாப் படத்திற்கு தமிழ்ப் பெயர் சூட்டி விட்டு , சினிமா டிக்கெட் 2000க்கு விற்றாலும் , நகராட்சி , மாநகராட்சி , பஞ்சாயத்துகளுக்கு கால் காசு வரி கூடக் கட்ட வேண்டியதில்லை.  தீப்பெட்டிக்குக் கூட வரி உண்டாம் .  ஆனால் , தமிழில் பெயர் வைத்து கோடிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு வரி ஏதுமில்லை வாழ்க !  செம்மொழித் தொண்டு / செம்மொழி சினிமாத் தொண்டு .

       இப்படிப்பட்ட அரசியல் பொருளாதாரச் சூழலில் , ஜூலை 27 , தி இந்து மையப் பக்கத்தில் ;
        லெனின் மரணத்திற்கு யார் பொறுப்பு ? ”  என்ற கட்டுரை வெளியாகி உள்ளது .  இங்கு அது ஆய்வுப் பொருளாகிறது . 

       2010-ல் இஞ்ஜினியரிங் மாணவரான லெனின் பாரத ஸ்டேட் வங்கியில் ரூபாய் 1,90,000 படிப்பு முடிக்க கடன் வாங்கினார்.

       படிப்பை 2014-ல் முடித்தார் .  இவ்வருடம் மே 6-ம் தேதி ரிலையன்ஸ் அனுப்பிய கடிதத்தில்  15-ந் தேதிக்குள் 2,48,623 ரூபாய் கட்ட வேண்டும் .  அதற்குப் பிறகு வரும் நாட்களுக்கு வட்டியும் , மற்ற செலவுகளையும் சேர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று இருந்திருக்கிறது.

       மழைக்காலத்து மரக்காளான் மாதிரி ஊருக்கு இரண்டு இஞ்ஜினியரியங் கல்லூரி இருக்கிறது . ஆண்டுக்கு லட்சக் கணக்கில் இஞ்ஜினியர்கள் .  தொழில் வளர்ச்சியோ அதள பாதாளத்தில் . வேலையில்லா இஞ்ஜினியரிங் பட்டதாரி ஆனார் லெனின் .

       இப்போது கடன்காரன் ரிலையன்ஸ் ரூபத்தில் .  தந்தையோ கொத்தனார் . லட்சங்களுக்கு எங்கு போவது .  ஈட்டிக்காரன் தினமும் தொலைபேசியில் மிரட்டல்.  மகனிடம் மிரட்டல் பற்றி சொல்லிவிட்டார் .

        திரும்பத் திரும்ப போன் மேல் போன் போட்டு மிரட்ர தொனியில் தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க .  என்னால நெருக்கடியைத் தாங்க முடியல ”  ( தி இந்து ) .  பையனிடம் சொல்லி விட்டார் .

       இன்ஜினியரிங் பட்டதாரி லெனின் தன்னைத்தானே அழித்துக் கொள்ளத் தூண்டப்பட்டு தற்கொலை செய்து கொண்டார் . 
       இது Event ( நிகழ்வு ) .

       தி இந்துவின் இக்கட்டுரைத் தலைப்பே மிகச்சரியான கேள்வியை எழுப்பியுள்ளது 
லெனின் மரணத்திற்கு யார் பொறுப்பு?  என்று .  அத்துடன் ரிலையன்ஸின் நடவடிக்கை -யையும் விமர்சித்துள்ளது . பாரத ஸ்டேட் வங்கி , ரிசர்வ் வங்கிகளின் பொறுப்பையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது ( ஜீலை 27 , 2016 ) .

       ஆனாலும் இது போதாது .

       இந்தியாவில் மானை வேட்டையாடியவன் , குடித்துவிட்டு கார் ஓட்டி , வீடில்லாதவர்கள் வீதியில் தூங்குபவர்களை கார் ஏற்றி கொன்றவன் எல்லாம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறான்.  [ சத்யம் ( Trust ) நீதிமன்றங்களின் காலடியில்] .

       கோடிகளில் கடன் வாங்கி கடனைத் திருப்பிக் கட்டாமல் வங்கிக்காரனை விரலைச் சூப்பச் செய்யும் தொழில் அதிபர்கள் . ( மல்லையா நினைவு வந்தால் கட்டுரையாளர் பொறுப்பல்ல ) .

       கோடிகள் லஞ்ச வழக்கு கோர்ட்டில் பல பத்து ஆண்டுகள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது .  இவர்கள் அதிகாரம் படைத்த பணக்காரர்கள் .  எல்லாமே வளைந்து கொடுக்கும் .  பொதுப் புத்தியும் இலவசத்தின் காலில் விழுந்து , ரோட்டில் சோறு தின்று நியாயப்படுத்தும் .

       இப்படியெல்லாம் சமூக வெளி காட்சியளிக்கும் போது லெனின் மட்டும் தற்கொலை செய்து கொண்டார் ? ஏன் ?

       இது பற்றி Alain Badiou  என்ற பிரான்ஸ் நாட்டு தத்துவவாதியும் , மன அலசல் ஆய்வாளரும்   Theory of the Subject   பற்றிக் கூறும் பொழுது , 

                When courage is combined with the Super ego , the result is what a Deleuzian would call reactive type of political movements  ] .   These are movements where militants  sacrifice themselves for higher authority such as god , the nation , or a dogmatically defined cause .
               

       இதைச் சுருக்கமாகத் தமிழாக்கம் செய்தால் இதன் சாரம்    ஒரு தன்னிலை துணிவுடன்  Super ego - வுடன் ஒன்றிணைந்தால் ( Super ego என்பது விழுமியம் ) அந்தத் தீவிரன் தன்னை அழித்துக் கொள்ளத் தயங்கமாட்டான் ”  என்பதாகும் . இத்தன்னிலை ஒரு வித மாயத்தோற்றத்திற்கு ( delusion ) உட்படுகிறது -  [ கேவலம் , மானம் போய்விட்டது , அம்மா , அப்பாவின் பேரை நாசம் செய்து விட்டோம் போன்ற பொய்த் தோற்றத்தின் ஆளுமைக்கு உட்பட்டு விட்டது அத் தன்னிலை ] . இந்தச் சமூக அமைப்பின் அவலங்களுக்கும் ஈட்டித் தனத்திற்கும் அடி பணிகிறோம் என்று எண்ணவில்லை .

       அதாவது , இதற்கு மாறாக , அந்தத் தன்னிலை துணிச்சலுடன் ( courage ) , நீதி ( justice ) வேண்டும் என்பதுடன் இணைந்திருந்தால் கதை கந்தலாகி இருக்கும் .

       ஏனென்றால் , நீதி வேண்டும் , சத்யம் வேண்டும் என்ற எண்ணம் நிலவும் சட்ட திட்ட திட்டங்களுடன் ஒத்துப் போகாது ; எதிர்த்து நிற்கும் .  இதுவும் அலன் பெய்டுதான்.

       உயர்நீதி மன்றமோ , உச்ச நீதிமன்றமோ சூமோட்டோ ( suo  moto ) வழக்காக இதை ஒருக்கால் ஏற்றால் . . . ? ( சட்டம் அனுமதித்தால் )  உண்மையை  (Trust ) நீதி எப்படித் தேடும் என்பது வெகுஜன மக்களுக்குத் தெரியவரலாம் .

       வங்கிகளும் , அரசும் , எத்தனை விதமான கடன்களை அரசியலுக்காக ரத்து செய்திருக்கிறது. 

       கேளிக்கை வரி விலக்கு ஆண்டுக்கு எத்தனை கோடி.

       இந்தக் கல்விக் கடனை ரத்து செய்திருந்தால் என்னவாம் ; அல்லது வட்டியை நீக்கி விட்டு தவணைகளைக் கூட்டியிருக்கலாம்.

       குறைந்தபட்சம் கல்விக் கடன் வாங்கிய வேலையில்லா பட்டதாரிகளை அனுதாபத்துடன் அணுகலாமே .

       கடன் வசூலுக்கு கங்காணி ரிலையன்ஸிற்கு தள்ளுபடி 55%  என்பது அநியாயமில்லையா ? . இது அவர்களை ஈட்டிக்காரனாய் ஆக்குமே !  அரசியல் விழிப்பு பொதுப் புத்திக்கு இதை வேறு , வேறு பரிமாணங்களில் உணர வைக்க வேண்டும் . 

                                                                     க.செ  

No comments:

Post a Comment