20 Apr 2019

முதலாளித்துவ ஜனநாயகம்

   பிரதமர் மோடி தன் ஆட்சியைப் பற்றி சுய லாவண்யம் பாடியபடி இருக்கிறார்.
என் ஆட்சியில் குண்டே வெடிக்கவில்லை என்பார். ஆனால் 47 இராணுவ வீரர்கள் அநியாயமாக சில மாதங்களுக்கு முன் கொல்லப்பட்டார்களே.ஏன்? எப்படி? என்றால் மூச்சே விடுவதில்லை.
       ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் பாராளுமன்றத் தேர்தலை திருவிழாவாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது இந்து அரசியல்.
       ஆனால், பாராளுமன்ற தேர்தல் சமூகத்தின் ஒரு அங்கம். சமூகத்தின் அவலங்கள் அனைத்தும் தேர்தலில் விளையாடிவிட்டது. துட்டுக்கு ஓட்டு ; வாக்குச் சாவடிகள் கைப்பற்றுதல் ; லட்ச லட்சமாய் பறக்கும்படையின் வீரப்பிரதாபங்கள்.
       முரண்பாடான , ஒன்றையொன்று விலக்கிக் கொள்கிற , எதிரிடைப் போக்கு உற்பத்தி முறைகளை சீராட்டுகிறார்கள். தன்னியல்பான வளர்ச்சியை வேரறுக்கிறார்கள். இந்திய விவசாயிகள் உள்நாட்டு அகதிகள் ஆகப்போகிறார்கள்.
       இனியும் இந்த முதலாளித்துவ ஜனநாயகம் வக்கிரங்களைத் தவிர வேறெதையும் கொடுக்கப் போவதில்லை.
       வங்கிகளை கடன்கொள்ளையர்கள் சுருட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது. என்ன செய்கிறது மோடி அரசாங்கம்.
       அண்டை அயலாரை  “ பச்சை “ வைரஸ் என்று குறிப்பிட்டு வக்கிர வெறுப்புணர்வை மக்களிடையே விசிறி விடுவது ஒரு சாமியார் முதல்வர்க்கு புனித வேலையாக உள்ளது..
       தன் சுயமோக பிரதிபலிப்பாக வானுயர்ந்த பட்டேல் சிலை பிறர் வழிபாட்டிற்காக        கட்டப்பட்டது.
       பாராளுமன்றத் தேர்தல் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் கதையாக உள்ளது. அதாவது, மக்களின் வரிப்பணம்,சாராயம் விற்றுக் கிடைத்த லாபம், பெட்ரோல் விற்பனை லாபங்களை கோடிகோடியாகப் பெருக்கி, அதில் கொஞ்சம் இலவசமாக வீசி எறிகிறார்கள், எறிவார்கள்..
       பரந்துபட்ட மக்கள் வர்க்கமாகத் திரள்வதற்கு முட்டுக்கட்டையாய் தொழிற்சங்கவாதம் ;        அதன் விளைவாக மக்கள் தங்களின் மூதாதையர் வழியான சாதியரீதியில்     திரள்கிறார்கள்.                                                                               
       சாதியத்தை ஒழிக்க எந்தக் கட்சியும் மறந்தும்கூட மூச்சு விடுவதில்லை.    மற்றொருபுறம் டிஜிட்டல் உலகை விஸ்தரிக்க முஸ்தீபு ; மலைகளையும், மரங்களையும் , தாவரங்களையும் அழித்து , எட்டு வழி, ஆறுவழி சூப்பர் ஹைவேக்கள். பன்னாட்டு பகாசுரர்களுக்கு தரகு முதலாளிகள் தொழில் புரிகிறார்கள்.
     
       விடிவு……?   காலம்தான் பதில்கூறும்.
                                                                                  க.செ

7 Apr 2019

அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி----- பகுதி - 3


மோடி அரசு தமிழகத்திற்கு ஒரு முக்கிய சடங்கை ,அதன் முக்கியத்துவத்தை   உணர்த்திவிட்டது.
       அதுதான் பாராளுமன்ற தேர்தல் , அழகர் ஆற்றில் இறங்கும் நாள்தான் [ சித்திரைத் திருவிழாவில் அதிமுக்கிய நிகழ்வு ] இதுவரை மிகப்பெரிய திருவிழாவாக இருந்து வந்திருக்கிறது.
       அந்த வரலாற்று நம்பிக்கையை எளிமையாகப் புறந்தள்ளிவிட்டு , பாராளுமன்ற தேர்தல் எதற்காகவும் காத்திருக்காது என்றும், தேர்தல் தேதியை தள்ளிவைக்க முடியாது என்றும் சொல்லிவிட்டது.
       முதலாளித்துவ பாராளுமன்றம் வைணவ ( அத்வைதம்) கட்டிலில் இடம் பிடித்துக் கொண்டது.
       பரம்பரை நம்பிக்கையின் ( சடங்கு ) இடத்தில் நவீன விழாவின் ( பாராளுமன்ற தேர்தல் ) வித்தை ஊன்றி புதிய நம்பிக்கைக்கு காவிக்கொடி அசைக்கப்பட்டிருக்கிறது.
       “ நம்பிக்கையானது மறைமுகமாக செயல்படுகிறது ; அதாவது , கருத்தியல் அடையாளத்திலிருந்து ( ideological identity ) சிந்தித்தலை நீக்கிவிடுகிறது ; கருத்தியல் நம்மீது ஒரு பிடிமானத்தை செலுத்துவதற்கு இது வழிவகுக்கிறது “ என்கிறார் சிசெக். கூடுதலாக  “ நம்பிக்கையும் ஆசையும் ( desire ) ஒன்றோடொன்று உறவுடையதாகும் “
       சென்ற பகுதியில் காமம் என்பது ஆசையில் ( desire ) அடக்கம் என்பதைத் தெரிந்தோம்.
       கூடுதலாக , மனிதகுல இருத்தல் ( humans being ) ஆசையாக இருக்கிறது ;         ஆசையானது இதரரின் ஆசையாக இருக்கிறது . இது புகழ்பெற்ற தத்துவார்த்த      விசயங்களாக உள்ளது ” என்கிறார் Kojeve.
       Kojeve ஆசையை பார்க்கும்விதம் புதினமாக உள்ளது.
       ” ஆசையானது இயற்கையானதாக இல்லாத ( non - natural  ) பொருளின் மீது செலுத்தப்படும்பொழுது மட்டுமே விலங்கின ஆசையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய மனிதகுல ஆசையாக இருக்கிறது .
        இன்னும் காத்திரமாக அவர் “ பிறரின் பௌதீக உடல்மீதல்லாமல் இதரரின் ஆசையை நோக்கி ஒருவரின் ஆசை செலுத்தப்படும்பொழுது மட்டுமே இந்த ஆசையை மனிதகுல ஆசையாகக் கருதமுடியும் “ என்கிறார்..
              ஆக , பெண் உடல் மீது செலுத்தப்படும் ஆசை , மிருக ( விலங்கின )ஆசையே ;
       அது மனிதத்தின் விருப்பமோ , காதலோ இல்லை என்றாகிறது.

       ஆசை குறித்த லெக்கானிய கருதுகோள்:
       ஆசை நனவிலியாக ( unconcious ) உள்ளது என்கிறார் லெக்கான்.
       ……”ஆசையும் இல்லாமையும் ( lack ) மற்றமையின் இல்லாமை ( lack of the Other )    குறித்த பிரச்சினையாக உள்ளது. அது தன்னிலையின் ( subject ) இல்லாமை ( lack )    குறித்ததல்ல “ என்பதில்தான் லெக்கானின் கண்டுபிடிப்பு உள்ளது .

       இனி சுயமோக வெறி ( narcissistic rage ) :
        ஆசைப்பட்ட பெண்ணால் , தான் மறுக்கப்படும் பொழுது., சுயமோக மனக்காயம் ஏற்பட்டுவிடுகிறது . அந்தப் பெண்ணைக் கொல்வது , அவள்மீது ஆசிட் ஊற்றுவது என்பது சுயமோக மனக்காயத்திற்கான (narcissistic injury ) ஒரு எதிர்வினையாகும். சுயமோகியின் சுயகௌரவம் ( self esteem ) சுயமதிப்பிற்கு எதிரான உணரப்பட்ட அச்சுறுத்தலாகும் . இதுவே சுயமோக வெறியாகிறது என்கிறார் ஹோகட்.
       சுயமோக வெறி உண்மையான தன்முனைப்பாக ( real assertiveness )  வெளிப்பட முடியாது ; சுயமோகிகளால் உணரப்பட்ட அல்லது கற்பனை செய்துகொண்ட ( தன்னைத்தானே) ( perceived or imagined ) சுயமோக மனக்காயங்கள் குறித்து மிக அதீத உணர்ச்சியாக ( over sensitivity ) இருப்பார்கள். இதன் விளைவு சுயமோக வெறியாக உள்ளது.
        இந்த வெறி எந்த வகையிலாவது பழியெடுப்பதற்கான மார்க்கத்தைத் தேடுகிறது .        இது ஹோகட்டின் கொடை. இது மிக கவனத்திற்குரியதாகவும் உள்ளது.
       “அடைந்தால் மகாதேவி இல்லையேல்…….”
                                                                                  க.செ